காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு பயங்கரவாதிகள் அத்துமீறல் சம்பவங்களுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பது அதிர்ச்சி அளித்து வருகிறது.இந்நிலையில் அந்நாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையொட்டி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் என்ன நடந்து விடப் போகிறது? என்ற கேள்வி எழலாம். பாகிஸ்தானிற்கு பெரிய நெருக்கடி, ஆபத்து காத்திருக்கிறது
சிந்து நதி நீர் பாகிஸ்தானின் உயிர்நாடிசிந்து நதி நீர்என்பது பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீரை தான் நம்பியிருக்கின்றன.சிந்து நதி நீரின் 93 சதவீதத்தை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அரிசி, கோதுமை, கரும்பு, காட்டன் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு ஆதாரமாக திகழ்கிறது.கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்கள் சிந்து நதியில் இருந்து நேரடியாக நீரை பெறுகின்றன.தர்பேலா, மங்க்லா ஆகிய ஹைட்ரோ பவர் பிளாண்ட்களும் தடையற்ற நீர் சேவையை சிந்து நதியில் இருந்து தான் பெற்று வருகின்றன.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் சிந்து நதி பயன்பாட்டால் பெறப்படுகிறது.ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவித்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது.
குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது.
உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்திய இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. இதற்கு பாகிஸ்தானிய விவசாயிகள் பாதிக்கப்படுவர், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற மனிதாபிமான அடிப்படையே காரணம்.
ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.
மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
1960ம் ஆண்டு கராச்சியில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், 65 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் செயல்படுத்த, நிரந்தர சிந்து நதி நீர் ஆணையம் செயல்பாட்டில் உள்ளது.
ஒப்பந்தம் அமல் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பினரும் உலக வங்கி மேற்பார்வையிலான சர்வதேச நடுவர் மன்றத்தை அணுக முடியும். அதன்படி பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியா மீது சில முறை புகார் அளித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















