கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மகளான சுபா என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மாமனார் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ரமேஷ் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ரமேஷுக்கு சொந்தமான ஹாலோ பிளாக் தயார் செய்யப்படும் இடத்தில் ரமேஷுக்கும் அவரது மனைவி சுபாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் சுபாவின் தம்பியான சஞ்சய்(23) என்பவர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து ரமேஷிடம் பிரச்சனை குறித்து கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகறார் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சயின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரே போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் சஞ்சயின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு கத்தியோடு இருந்த ரமேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறில் மைத்துணரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















