தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,இன்றைய தினம் மாலை, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற, தவத்திரு. அன்னை சகுந்தலா அவர்கள் இயற்றிய “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு உரையாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனின் பேரருளால் சில மனிதர்களுக்கு மட்டுமே வாழ்வின் இரண்டு ரகசியங்கள் தெரியும். ஒன்று பிறந்தநாள், மற்றொன்று நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம் அறிந்த நாள். இவ்விரண்டையும் அறிந்து, கடந்த 60 ஆண்டுகளாக இறைப்பணியைச் செய்து வருபவர், தவத்திரு.
அன்னை சகுந்தலா அவர்கள். இதுவரை திருவாசகம், தேவாரம், திருவருட்பா உள்ளிட்ட பல ஆன்மீக நூல்களை, பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க உரை வழங்கிய அம்மா அவர்கள், வேல்மாறல் மற்றும் கந்த சஷ்டி கவசம் விளக்க நூலை இயற்றியிருப்பது அவரது ஆழமான ஆன்மீக ஆற்றலை நமக்குக் காட்டுகிறது.
மகாமந்திரம் என போற்றப்படும் வேல்மாறலுக்கும், கந்த சஷ்டி கவசத்திற்கும் விளக்க உரை வழங்குவது அத்தனை எளிதான பணி அல்ல. சஷ்டியில் விரதம் இருந்தால் கரு உருவாகும் என்பதை சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என சொன்னது சனாதனம்.
அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் பலரும் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர். நமது தர்மத்தை பாதுகாப்பதும், போற்றுவதும், அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாகும்.
வெற்றி வேல் ஏந்திய வேலவனின் அருளால் இப்புத்தகம் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி,என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















