குழந்தை பிறந்த தினம் பிறந்த நாளா?,குழந்தைக்கு பெயர் சூட்டும் நாள் பிறந்த நாளா? பா.ஜ.க தலைவர் K. அண்ணாமலை அறிக்கை!
நவம்பர் 1-க்கு பதில் ஜீலை 18 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் வியப்பாக உள்ளது.மெட்ராஸ் ராஜ்ஜியம் என்பது பின்னர் நாட்டில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள் மெட்ராஸ் ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சென்றன.
அந்த நாளான நவம்பர் 1ம் தேதியை அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்கள் தோன்றிய நாளாக கொண்டாடி வருகின்றன. அதே நாள் தான் சென்னை மாகாணம் தனியாக இன்றைய தமிழகமாக உருவெடுத்தது. தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் உண்ணா நோன்பிருந்து நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு”
என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அறப்போராட்டம் நடத்தி உயிர் துறந்தார். அதன் பின்பு தான் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு தனித்து உருவான நாள் நவம்பர் 1 தான், ஆனால் இதற்கு பெயர் சூட்டப்பட்ட நாள் ஜீலை 18 ஆம் நாள் ஆகும். குழந்தை பிறந்த
நாள் தான் குடும்பத்தினரால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். குழந்தைக்கு பெயர் சூட்டிய நாளை எவரும் கொண்டாடுவது இல்லை.
கடந்த அ.தி.மு.க அரசு “நவம்பர் 1” ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்த ஒரே காரணத்திற்காக, அதை மாற்ற நினைப்பது தி.மு.க அரசிற்கு அழகல்ல. வரலாற்றை திசை திருப்புவதே தி.மு.க வின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை தை முதல் நாளாக மாற்ற முயன்றார்கள். இப்போது “தமிழ்நாடு” உருவான “நவம்பர் 1” ஆம் நாளை மாற்ற முயல்கிறார்கள். மேலும், கடந்த 2020, நவம்பர் 1ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” வாழ்த்துகள் என்று இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களே பத்திரிகைச் செய்தி வெளியிட்டதை நினைவுக்கூற விரும்புகிறேன்.
இதன் மூலம் மக்களுக்கு எதிரான முரண்பாட்டுக் கருத்துக்களையே தனது கொள்கை என்பதை தி.மு.க மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
என பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















