சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது.

24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ. 53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும் (அதன் மூளையாக செயல்பட்டவர் உட்பட),  அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சாத்தியமுள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 பிப்ரவரி 12 அன்று கைது செய்யப்பட்ட இந்த கும்பலின் உறுப்பினர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான மாண்புமிகு நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதர நபர்களின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.

இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ வரி செலுத்துவோர் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள்: 26142850 மற்றும் 26142852. மின்னஞ்சல்: Sevakendra-outer-tn@gov.in

கூடுதல் ஆணையர் திருமதி. பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version