இந்தியாவில் இதுவரை கொவிட்-19 நோய் தொற்று 195 பேருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள். மத்திய அரசு வெளியிட்டுள்ள இன்று (20.03.2020) காலை 9 மணி நிலவரப்படியான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 19 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குடிபெயர்ந்து சென்றிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதுவரை கொவிட்-19 நோய் தொற்றுக்கு இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேருக்கு கொவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கேரளாவில் 28 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேருக்கும், தில்லியில் 17 பேருக்கும், கர்நாடகத்தில் 15 பேருக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஹரியானாவில் 14 வெளிநாட்டவர் உட்பட 17 பேருக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 10 பேருக்கும், தெலங்கானாவில் 7 பேருக்கும், ஜம்மு யூனியன் பிரதேசத்தில் 4 பேருக்கும், இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டின் விமான நிலையங்களில் 14,31,734 பயணிகளிடம் இந்த வைரசுக்கான சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















