தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…

அவசிய தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கும்.எனவே தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யுங்கள், அதில் குழப்பமான முடிவு ஏற்பட்டால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுங்கள். தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம். ஆனால், பல தனியார் மருத்துவ மனைகள், லாப நோக்கத்துடன், கொரோனா நோயாளிகளை சிடி ஸ்கேன் எடுக்க அறிவுறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.“இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதால், கொரோனாவுக்கு கூடுதல் வலிமை கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்ட ஐந்து, ஆறு நாட்கள் வரை ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது. தொற்று தீவிரமாக இருக்கும் போது தான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு தான் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும். இவ்வாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Exit mobile version