தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று பழனி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது ;-
தி.மு.க.,வில் தலைவருக்கு தனி இருக்கை. அவருடைய இருக்கைக்கு சற்று தள்ளி மற்ற இருக்கைகள். தன் அடிமைகளிடம் பேசும் ஆணவத்தில் தலைவரும், அடி வருடர்களின் எஜமான விசுவாசமும், தி.மு.க.,வில் தினப்படி காட்சி. தலைமுறை தலைமுறையாக, அந்த தலைவரின் குடும்ப வாரிசுகள் தலைமை பொறுப்பிலேயே இருப்பர்; அவர்கள் தொண்டராக மாட்டார்கள்.
அவருக்கு அடிவருடும் தொண்டர்கள், என்றைக்குமே தலைமைக்கு ஆசைப்படவும் முடியாது. ஆசைப்பட்டாலும், தகுதி இருந்தாலும், கிடைக்கவும் கிடைக்காது. இது தான் தி.மு.க.,வின் இன்றைய நிலை.
கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும், சர்வாதிகாரம் நடத்தப்படும் கட்சி தான் தி.மு.க.,
தற்போது, தி.மு.க.,விற்கு பயம் வந்து விட்டது. காவல்துறையை ஏவல் துறையாக்கி, பழனியில் வைக்கப்பட்டிருக்கும் பா.ஜ., பேனர்களும், போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. காவல் துறையினர் நேர்மையாக நடந்து கொள்ளாமல், ஆளுங் கட்சிக்கு கூஜா துாக்கும் அவலத்தை செய்கின்றனர்.
காவல் துறையினரே சட்டத்தை மீறி, தங்கள் கைகளால் பேனர்களை கிழிக்கின்றனர். தி.மு.க., ஆட்சி எப்போதும் தொடரப்போவதில்லை. நாளை நாங்களும் ஆட்சிக்கு வருவோம்.
இதை உணர்ந்து காவல் துறை செயல்பட வேண்டும். இதுவரை பா.ஜ., அப்பாவித் தொண்டர்கள் மீது, 181 தவறான வழக்குகள், தி.மு.க., பின்புலத்தில் தொடுக்கப்பட்டிருக்கின்றன,
இதுவரை, 17 காவல்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பாக, ஆளுங் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த அப்பாவி தொண்டர்களை கைது செய்துள்ளனர். பா.ஜ., ஆட்சியில், தவறாக செயல்பட்ட அத்தனை காவல் துறை அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் விட மாட்டோம்.
பழனி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் செந்தில்குமார், எந்த சிறப்பும் இல்லாதவர். குடும்ப, ‘கோட்டா’வில் பதவி பெற்ற பணக்கார செந்தில்குமாருக்கு ஏழைகளின் கஷ்டம் புரியாது. அதனால் தான், துப்புரவு பணியாளர்கள், எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய இடத்தில், 12 மணி நேரம் கசக்கி வேலை வாங்கப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















