சென்னை அண்ணா சர்வதேச விமான முனையத்தில், விமான நிலைய சுங்கத்துறையினர் 2024, அக்டோபர் 8 அன்று நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கச் சங்கிலிகள், 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 4 ஐஃபோன்கள் அடங்கும்.
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 4 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் இடைமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான 2 தங்கச் சங்கிலிகளை அவர்களது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதே போன்று 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 256 ஜிபி திறனுள்ள ஐஃபோன் 16 ப்ரோ 4-ம் அவர்களது உடமைகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்தம் மதிப்பு ரூ.1.02 கோடியாகும். இது தொடர்பாக ஒரு பயணி கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















