தங்கக்கடத்தல் சொப்னா விவகாரம் ! மௌனம் காக்கும் பினராயி விஜயன் ஆட்சி கலைக்கப்படுகிறதா?

கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக் கடத்தல் விவகாரமும் தான்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சிலரின் உதவியுடன் தங்கக் கடத்தல் நடந்து வருவது சுங்கத்துறைக்கு தெரியவந்தது. சுதாரித்து கொண்ட சுங்கத்துறை விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அமீரகத்தில் இருந்து தூதரக அலுவலகத்திற்கு வந்த தூதரக சரக்கு(டிப்ளமேட்டிக் லக்கேஜ்) சோதனையை மேற்கொண்டது சுங்கத்துறை. அந்த சோதனையில் தங்க கட்டிகள்பிடிபட்டது இவை சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இதுவரை தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சோதனை செய்யாமல் அனுப்ப வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இங்கே முதலில் பார்சல் பிரிக்கப்பட்டது கடந்த ஜூன் 30- ம் தேதி. தங்கம் கடத்தி வரப்பட்டதாக சுங்கத்துறை அறிவித்ததோ ஜூலை 7- ம் தேதி. ஏன் இந்த ஒரு வார கால தாமதம் என விசாரித்த போது இரு விஷயங்கள் சொல்லப்படுகிறது. முதலாவதாக, அன்றே தகவலை அறிவித்தால், கேரள ஊடகங்கள், அரசுத் துறை மற்றும் காவல்துறைகளில் வியாபித்திருக்கும் இடதுசாரி ஊழியர்களின் கைவண்ணத்தால், ஆண்டாண்டு காலமாய் நடக்கும் தங்க கடத்தல் செய்தியினூடே இதுவும் கலந்து மறையும் என்பதாலும், இந்த லக்கேஜ் தொடர்பாக யாரெல்லாம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தான் ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார்கள்.

இந்த கடத்தலில் அரசின் ஐ.டி துறையில் செயல் மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், முக்கிய புள்ளி என்பதும், ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த சிவசங்கர் ஐ. ஏ. எஸ் என்பதும் தெரியவருகிறது.

கடத்தல் நாயகி ஸ்வப்னாவுக்கும் முதல்வருடனான தொடர்பை பார்ப்போம்.

சிவசங்கரைப் பொறுத்தவரையில் முதல்வரின் முதன்மை செயலாளர் என்பதால் அடிக்கடி முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். முதல்வர் மகள் தொடர்புடைய ‘ஸ்பர்க்ளர்’ என்ற அமெரிக்க கம்பெனியிடம், ஒன்றே முக்கால் லட்சம் கேரள மக்களுடைய அந்தரங்க உடல்நிலை பற்றிய டேட்டா பேஸ் எடுத்துக் கொடுத்த வழக்கில் இருந்து முதல்வரை காப்பாற்றியதும் இந்த சிவசங்கர் தான். தங்கக் கடத்தல் மாஃபியாக்களுடன் சிபிஎம்க்கு உள்ள தொடர்பை பார்க்கும் போது இது இன்று நேற்று தொடங்கியது அல்ல. கேரளாவைச் சேர்ந்த பிரபல தங்க கடத்தல்காரன் முஹம்மது பயாஸ் என்பவனுடன் நெருங்கிய தொடர்பு சிபிஎம் வட்டாரங்களுக்கு உண்டு.

மேலும் தங்க கடத்தல் வழக்கில் அரசியல் தொடர்புகள், அதிகாரிகள் தொடர்புகள், சர்வதேச தீவிரவாத கும்பலின் தொடர்புகள் என முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. எனவே இதில் விரிவான விசாரணை நடத்தக்கூடிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் பல்வேறு ரகசியங்களும், தொடர்புகளும் அம்பலமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றன. இந்த நிலையில் தான் விசாரணை அதிகாரிகளுக்கு திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக ஸ்வப்னாவின் பின்னணியில் சர்வதேச தங்கக்கடத்தல் கும்பலும், தீவிரவாதிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்த தகவலும் உள்ளதால் தீவிரவாதிகளிடம் இருந்து இத்தகைய மிரட்டல் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் உடனடியாக டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே விசாரணையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, விசாரணை அதிகாரிகளுக்கு உயர் பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .

இதனிடையே கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப், சரித், மற்றும் பைசல் ஆகியோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, கடந்த ஓராண்டில் 200 கிலோ தங்கம் கடத்திய அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மட்டுமே 70 கிலோ தங்கத்தை கடத்தியுள்ளனர். ஸ்வப்னாவை பகடைக்காயாக பயன்படுத்தி, கேரள வி ஐ பி -க்கள் பலர் இந்த கடத்தல் நாடகத்தில் கோடிகளை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கேரளா தலைமை செயலகத்தில் கடந்த ஆக.25-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. இந்நிலையில் ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாக காங்., மற்றும் பா.ஜ. உறுப்பினர்கள் தலைமை செயலகம் முன் தர்ணா செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சட்டசபையில், பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசிய முதல்வர் பினராயி விஜயன், தங்கக் கடந்தல் விவகாரம் பற்றி எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.இதற்கிடையே, தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, முதல்வரின் முன்னாள் செயலருக்கு நெருக்கமானவராக கருதப்படும், முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி அருண் பாலசந்திரன், சுங்கத்துறை அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார்.அருண் பாலச்சந்திரன் தான், தங்கக் கடத்தலுக்கு வசதியாக, ஸ்வப்னாவுக்கு, தலைமைச் செயலகத்துக்கு அருகே, வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மேலும் இந்த தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினாரயி விஜயன் பெயர் அடிப்பட்டு வருகிறது. பல அரசு அலுவலர்கள் இந்த கடத்தலுக்கு துணைபோயுள்ளார்கள். இதை தனிப்பட்ட விதமாக உல் துறை அமைச்சகம் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவித்து வருகிறன்றன.

பினாராயி விஜயனின் மகள் திருமணத்தில் ஆயுள் தண்டனை கைதி பங்கேற்றது முதல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது வரை உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. பினாரயி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது. மேலும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேரளா கம்யூனிஸ்ட் தற்போது நீட் தேர்வு நடத்த வேண்டும் என சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version