மத்திய அரசின் நலத்திட்டங்களின் தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் ! ஊடக பிரிவுகளுக்கு இணையமைச்சர் எல்.முருகன் அதிரடி உத்தரவு!

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை கடைகோடி மக்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊடகப் பிரிவுகளும் தங்களது செயல்பாட்டினை முடுக்கி விடவேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல்.. முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த அவரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய அமைச்சர், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள், சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி / கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை செய்தி தொலைக்காட்சியும் தங்களது செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்பு செய்திட வேண்டும் எனவும் கூறினார். விவசாயிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறையினால் பயனடைந்தோர்களின் அனுபவங்கள் குறித்த தகவல்களையும், மத்திய அரசின் மின்னணு ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டுமென கூறினார்.

இதேபோல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டு பிரிவு தமிழ்நாட்டின் வரலாறு, பாராம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்கள் அதிக அளவில் வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு ஊடகப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. மா. அண்ணாதுரை, இயக்குநர் திரு. குருபாபு பலராமன், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் திரு. காமராஜ், அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version