ராகு கேது பெயர்ச்சி 2023 மிதுன ராசிக்கான முழு பலன்கள் என்ன

மிதுனம்

(மிருகசீரிடம் 3 ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3 ம் பாதம் வரை)

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையறிந்து அதன் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கும், புத்தி சாதுர்யமும் அறிவுக்கூர்மையும் நிர்வாகத் திறமையும் கொண்ட மிதுன ராசி நண்பர்களே…

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 11 ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் 5 ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் நன்மைகளையும் ஒரு சில சங்கடங்களையும் உண்டாக்கி வந்தார்கள். ஒரு பக்கம் லாபகரமான நிலை என்றால் மறுபக்கம் சங்கடம், எதிர்ப்புகள், வீண் பிரச்சினைகள், உடல்நிலையில் பாதிப்பென்று உண்டாகி உங்களை அலைக் கழித்திருக்கும். எப்படி இருந்தாலும் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு ஓரளவிற்கு நன்மைகளையே வழங்கி இருப்பார்கள்.

சங்கடங்கள் உங்களுக்கு வந்திருந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளித்திடக் கூடியவராக இருந்திருப்பீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகி இருக்கும். அதன் காரணமாக மனதில் குழப்பம், சங்கடம் என்பதால் சரியாக உறங்காமல் சாப்பிடாமல் உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து 11 ம் இடத்து ராகு பகவான் உங்களைப் பாதுகாத்து வந்தார். தேவைகளுக்கேற்ப வருமானத்தையும் வழங்கி வந்தார். எதிர்பாலினரால் நன்மைகளையும் அடைந்திருப்பீர்கள். ஆலயங்களுக்கு செல்வது, வெளியூர் பயணம், கௌரவமான நிகழ்ச்சிகள் என்று உங்கள் நிலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நகர்ந்திருக்கும்.

இந்த நிலையில் 8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கும், கேது பகவான் 4 ம் இடமான மாதூர் மற்றும் சுகஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி, அந்த இடங்களுக்குரிய பலன்களை 26.4.2025 வரை உங்களுக்கு வழங்கிட உள்ளனர்

நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது? போராட்டமாக இருக்குமா? உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறுமா? எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடியுமா? குடும்ப நிலையில் இருந்து வந்த சங்கடங்கள் விலகுமா? மனதில் இருந்த பிரச்சினைகள் விலகி நன்மைகள் உண்டாகுமா? வருமானம் அதிகரிக்குமா? பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் காண முடியுமா? லாப நிலையும், தற்போது வந்து கொண்டிருக்கும் வருவாயும் தொடருமா? சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப்படக்கூடிய நிலை உருவாகுமா? தொழில் துறையில் வெற்றிபெற முடியுமா? நிரந்தர உத்தியோகம் கிடைக்குமா? பார்த்து வரும் உத்தியோகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா? அல்லது இப்போதுள்ள நிலையே தொடருமா? என்னதான் எங்களுடைய எதிர்காலம்? எப்போதும் சங்கடங்கள் தானா? மாற்றங்கள் உண்டாக எந்தவொரு வாய்ப்பும் இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஜீவன ஸ்தான ராகுவின் சஞ்சாரமும் பார்வைகளும்

8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10 ம் இடமான மீன ராசிக்குள் செல்கிறார். அங்கிருந்து 4 ம் இடமான மாதூர் ஸ்தானத்தையும், 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும், 12 ம் இடமான விரய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார்.

தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும்போது நீங்கள் செய்து வருகின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிகபட்சமாக அக்கறை தேவைப்படும். உங்களுடைய உழைப்பு அதிகம் இருந்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் என்பது இக்காலத்தில் குறைவாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகாமல் மனதில் புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். தொழிலின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கவும், இயந்திரம் வாங்கவும் வசதிகள் உண்டாகும். அரசாங்க உதவி நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பயனளிக்கும். உத்தியோகத்தில் சில தடைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் காலமாக இக்காலம் இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவியும் உண்டாகும். ஆடம்பர செலவுகள் செய்து விருந்து வைப்பதுடன் சுப காரியம் ஒன்றையும் நடத்தி முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் உதவி அதிகளவில் உண்டாகும். போக காரகனும் யோக காரகனுமான ராகு பகவான், தான் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை இவ்விதமாக உங்களுக்கு வழங்குவார். பயணத்தினால் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள் உங்களை வந்தடையும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சேமிப்பு அதிகரிக்கும். பொன் பொருட்கள் சேர்க்கை வீட்டில் உண்டாகும். குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

சுக ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

10 ம் இடத்தில் அமர்ந்து அங்கிருந்து 4 ம் இடமான சுக ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்தும் ராகு பகவானால், உங்கள் உடல்நிலை ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இல்லாமல் போகும். மனதிலும் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காமல் போகும். அதனால் சேமிப்பு என்பது இக்காலத்தில் இருக்காது. வெளியூர் பயணங்கள் ஏற்படும். புதிய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் உதவிகளும் உண்டாகும். தெய்வத் தலங்களுக்கு சென்றுவரும் பாக்கியம் உண்டாகும். பெரியவர்களின் சந்திப்பும் அவர்களுடைய உதவியும் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். தாயாரின் உடலில் சங்கடமான பலன்கள் உண்டாகும். வீடு வாகனங்களால் சிரமங்கள் கூடும். செலவுகள் தோன்றும். தீய பழக்க வழக்கங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையைத் தவிர்த்து வேறு நபர்களால் வாழ்க்கைத் தடுமாறும். தடம்மாறும். ரேஸ் லாட்டரி ஸ்பெகுலேஷன் போன்ற வகைகளில் சில ஆதாயங்கள் உண்டாகும். விவசாயம் கால்நடை போன்றவற்றில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படாது. திருமணம் மற்றும் சுபகாரியங்களில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவையாக இருக்கும்.

ஆயுள் ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

10 ம் இடத்தில் அமர்ந்து அங்கிருந்து 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்துகின்ற ராகு பகவானால், உடலில் இனம் புரியாத நோய் தோன்றி மருந்துக்கு கட்டுப்படாத வகையில் தொடர்ந்து தொல்லையை ஏற்படுத்தி வரும். எடுக்கும் காரியங்களில் பெரும்பாலானவை தோல்வியில் முடியும். மனதில் எப்போதும் ஒருவித குழப்பம் இருக்கும். செய்து வரும் தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரும். தொழில் புரிவோருக்கு எதிர்பாராத சங்கடம் உண்டாகலாம். வியாபாரத் தடைகளால் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாக நேரும். எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் ஏற்படாது. குடும்பத்திற்குள் பற்றாக்குறை நிலவி வரும். நெருங்கிய உறவினருக்கு இக்காலத்தில் கண்டம் உண்டாகும். தெய்வ அனுகூலம் இல்லை என்ற மனநிலை ஏற்படும் இதற்கெல்லாம் காரணம் 8 ம் இடத்தின் மீது பாப கிரகமான ராகு பகவானின் பார்வை பதிவது தான். இக்காலத்தில் எந்தவொரு புதிய முயற்சியும் தொடங்க வேண்டாம். தெய்வ பக்தியில் மனதை செலுத்தி வந்தால், வரப்போகும் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

விரய ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

10 ம் இடத்தில் அமர்ந்து 12 ம் இடமான விரய ஸ்தானத்தின் மீது பார்வையை செலுத்தும் ராகு பகவானால், இக்காலத்தில் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை அடைவீர்கள். உடல் நலம் சீராக இருந்தாலும் மனதில் இனம் புரியாத குழப்பமும் சஞ்சலமும் இருந்து வரும். பழைய கடன் வகைகளால் பிரச்சனைகள் தோன்றும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்பட்டாலும் மனதில் திருப்தி இல்லாமல் போகும். வருமானத்தில் தடைகள் இருக்கும். திடீர் செலவுகள் தோன்றும். பொன் பொருட்களை அடமானம் வைக்க நேரிடும். பயணங்களில் தடைகள் ஏற்படும். வீண் அலைச்சல் வீண் பிரச்சினை என்று அவ்வப்போது ஏதாவது ஒன்று தோன்றிக் கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் தோன்றும். விவசாயத்தில் சுமாரான பலன்களே உண்டாகும். கால்நடை வகையில் அபிவிருத்தி இல்லாமல் போகும். வாகன வகையில் பழுது பார்ப்பு செலவுகள், இருப்பிடத்தை மாற்றவேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். பொதுவில் இக்காலத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருந்தால் ஈடுபடும் காரியத்தில் சங்கடங்கள் உண்டாகாது.

ராகு பகவானின் ஸ்தான பலனும் பார்வைகள் பலன்களும் இத்தகையதாக இருக்க, கேது பகவான் எத்தகைய பலன்களை வழங்குவார் என்று தானே கேட்கிறீர்கள்?

சுக ஸ்தான கேதுவின் சஞ்சாரமும் பலன்களும்

8.10.2023 அன்று 4 ம் இடமான மாதூர் மற்றும் சுக ஸ்தானமான கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது பகவான், அங்கிருந்து 2 ம் இடமான குடும்ப ஸ்தானத்தையும், 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும், 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார்.

4 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில் தாயாரின் உடல் நிலையில் அதிகபட்சமான சங்கடங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகளுக்காக கையிருப்புகள் கரையும். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் எதிர்பாராத சங்கடமும் முடக்கமும் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடும் கடன் தொல்லையும் அளவிற்கு மீறி இருக்கும். எதிலும் வீண் அலைச்சல், தேவையில்லாத சங்கடங்கள் தோன்றும் குடும்பத்தினர் பற்றிய கவலையும் எதிர்காலம் குறித்த சிந்தனையும் அதிக அளவில் ஏற்படும். உடல் நலத்தில் ஏதேனும் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். மனதில் குழப்பமும் அதிகமாகும். தவறான நண்பர்களின் சேர்க்கையால் தவறான பழக்கங்களும், ஒழுக்கத்திற்கு மாறான செயல்களும் ஏற்படும். வீடு வாகனம் போன்றவற்றில் பழுதுபார்ப்பு செலவுகள் கூடும்.

இவையெல்லாம் 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டாகப் போகும் பலன்கள். கேதுவின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகப் போகிறது?

குடும்ப ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

4 ம் இடத்தில் அமர்ந்து குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், குடும்பத்திற்குள் குழப்பமான நிலை, பூசல், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, எதிர்பார்த்த காரியங்களில் தாமதம், பணத்தட்டுப்பாடு, வீண் செலவுகள் தோன்றும். உற்சாகமான நிலை இல்லாமல் போகும். செய்கின்ற தொழிலில் ஓரளவுதான் ஆதாயம் இருக்கும். வெளியூர் பயணமும், தொழிலில் மாற்றமும் ஒரு சிலருக்கு ஏற்படும் அப்படி மாற்றம் உண்டாகின்ற நிலை வந்தால் அது உங்களுக்கு சிறப்பான நிலையை உண்டாக்கும். உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும். புதிய நண்பர்களை இக்காலத்தில் நம்பிட வேண்டாம். அவர்களை நம்பினால் பல வகையிலும் சங்கடங்களே உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தால் அது திரும்பவும் உங்கள் கைக்கு வராமல் போகும். பழைய நண்பர்கள் உதவி புரிபவர்களாக இருப்பார்கள். செய்கின்ற தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தி எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இக்காலத்தில் நன்மைகள் உண்டாகும்.

சத்ரு ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

4 ம் இடத்தில் அமர்ந்து ருண ரோக சத்துரு ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், உங்கள் உடல் நிலையில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். மனதில் அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலைத்தேடி வருபவர்களுக்கு வேலை அமையும். சொந்தமாக தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் உங்களை வந்தடையும். விவசாய நிலங்களில் கிணறு தோண்டுதல், பம்பு செட் அமைத்தல் போன்ற பணிகளும் சிறப்பாக நடைபெறும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் ஊதிய உயர்வும் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய பொருட்கள், ஆடை ஆபரணம் மற்றும் நவீன வசதிகள் ஏற்படும். விரோதிகள் தொல்லை நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள் விலகிப் போவார்கள். விரோதிகள் செய்யும் சூழ்ச்சிகளும் உங்களுக்கு நன்மையாக முடியும். வழக்குகள் ஏற்பட்டாலும் அதில் வெற்றி ஏற்படும். கடன்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. திருமண வயதினருக்கு திருமணம் கூடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கும் வெளிநாடு சென்று கல்வி கற்பவர்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்து பயன் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அதிகளவில் உண்டாகும். எதிலும் லாபம் என்ற நிலையை அடைவீர்கள். சேமிப்பு உயரும். நிலையான சொத்துகள் பொருட்கள் உங்கள் பெயரில் அமையும். நேரத்திற்கு உணவு உண்டு உறங்கும் நிலை உருவாகும்.

தொழில் ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

4 ம் இடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், உங்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகள் உண்டாகும். செல்வந்தர்களின் நட்பு, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு, உதவி போன்றவை இக்காலத்தில் ஏற்படும். செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முயற்சி அதிகரிக்கும் தொழில் சார்ந்து அலைச்சல் இருந்தாலும் வருமானம் அதற்கேற்றபடி அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கடன் வாங்கும் நிலை ஏற்பட்டாலும் அதனால் ஸ்திர சொத்துகளை வாங்கக்கூடிய நிலையுண்டாகும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். முதலாளி மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். தெய்வத்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணத்திலிருந்த தடைகள் விலகி கெட்டி மேள சப்தம் கேட்கும். பிற இனத்தினர், மதத்தினரால் அதிக உதவிகள் ஏற்படும். குறுக்கு வழி முயற்சியிலும் வருவாய் கூடும். தீய பழக்க வழக்கத்திற்கு உங்களில் ஒரு சிலர் அடிமையாக வாய்ப்புண்டு. மார்பு சம்பந்தமான நோய்த் தொல்லைகள் ஏற்பட்டு விலகும்.

பொதுப் பலன்கள்

ராகு கேதுவின் சஞ்சாரத்தை வைத்தும் அவர்கள் பார்க்கும் பார்வைகளை வைத்தும் உண்டாகப் போகும் பலன்கள் பெரும் பகுதி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

ராகு பகவான் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரித்து கேந்திராதிபத்திய பெறுவதால், தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உங்கள் முயற்சிக்கு ஏற்பவும் உழைப்பிற்கு ஏற்பவும் பலன்களை அடைவீர்கள்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் அமர்ந்தாலும், எதிர்ப்புகளை வெல்லக்கூடிய, நோய்நொடிகள் இல்லாமல் வாழ்ந்திடக் கூடிய நிலையை ஆறாம் இடத்தை அவர் பார்வையிடுவதின் வழியாக வழங்கியிருக்கிறார். அசாத்தியமான துணிவுடன் எதிர்ப்புகளை எல்லாம் இல்லாமல் செய்து, எதிரிகளை எல்லாம் ஓட வைத்து, தைரியமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 10 ம் இடத்தின் மீதான பார்வையும் தொழிலில் உங்களுக்கு அபிவிருத்தியை வழங்குவதுடன் இக்காலத்தில் புதிய சொத்துகள், வாகனங்கள் வாங்கும் நிலையையும் உங்களுக்கு வழங்கிட இருக்கிறது. நினைத்த செயல்களை நினைத்தபடி முடிப்பதற்கு இது யோகமான காலமாகும். என்றாலும், எச்சரிக்கையுடனும் வேகத்துடனும், சோர்வடையாமல் உழைப்பதாலும், அதற்குரிய முயற்சிகளாலும் தான் வெற்றி அடையமுடியும்.

குரு சனி சஞ்சாரப் பலன்கள்

ராகு பகவான் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்திலும், கேது பகவான் சுக ஸ்தானமான 4 ம் இடத்திலும் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ள நிலையில், குருபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் 30.4.2024 வரை சஞ்சரித்து நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை வழங்குவார். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் தோன்றும். மனதில் புதிய தைரியமும் துணிச்சலும் உண்டாகும். எது வந்தாலும் அதை சமாளித்திடக்கூடிய மனநிலை உண்டாகும். வரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும் அவருடைய 5,7,9 ம் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3,5,7 ம் இடங்களில் பதிவதால், முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பிள்ளைகள் நிலை உயர்வடையும். கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். திருமண வயதினருக்கு திருமணம் கூடி வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பல்வேறு சங்கடங்களையும் நெருக்கடிகளையும் வழங்கி வரும் சனி பகவான், 20.12. 2023 முதல் 9 ம் இடமான பாக்கியஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து யோகமான பலன்களை வழங்கிட இருக்கிறார். உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நிலையை சனி பகவான் ஏற்படுத்துவார். சனி கொடுப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்ற உண்மையை இக்காலத்தில் உணருவீர்கள். இதுவரையில் எந்தவிதமான சங்கடங்களை எல்லாம் நீங்கள் சந்தித்து வந்தீர்களோ அந்த சங்கடங்கள் எல்லாம் விலகி சந்தோஷமான நிலையை இனி நீங்கள் காணப் போகிறீர்கள். எதிர்மறையான பலன்கள் எல்லாம் மாற்றம் பெற்று நன்மைகளை அடையக்கூடிய நிலை உங்களுக்கு உண்டாகப் போகிறது.

பரிகாரம்
ஒரு முறை காளஹஸ்திக்கோ அல்லது திருப்பாம்புரத்திற்கோ சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்துவர சங்கடங்கள் குறைய ஆரம்பிக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் ராசி நாதனான புத பகவான் அருள் பாலிக்கும் திருவெண்காட்டி ற்கு சென்று ஒரு முறை அவரை வணங்கி வழிபட்டுவர வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.

ஜோதிட வித்தகர்
திருக்கோவிலூர் பரணிதரன்
2/121. பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர் 605759.
விழுப்புரம் மாவட்டம்.9444393717– 9940686060

Exit mobile version