‘புலித் திட்டம்’ மற்றும் ‘யானைத் திட்டம்’ ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக ‘சிங்கத் திட்டம்’ மற்றும் ‘டால்பின் திட்டம்’ ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார்.
அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார்.
நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார்.
உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.—-
– —-
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















