மேம்பட்ட கல்வியையும், தொழில்முனைவு வாய்ப்புக்களையும் நமது இளைஞர்களுக்கு வழங்க நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்: பிரதமர்

தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை  நம் நாட்டின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர், தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான நெறிசார்ந்த சுழற்சியில் சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குவார்கள் என்றும், இந்த நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை கட்டமைப்பவர்களை உருவாக்குகின்றன என்று திரு மோடி கூறினார். தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான நெறிசார்ந்த சுழற்சியை இது துவக்குகிறது. இந்தியாவின் மிகப்பெரும் சக்தியான இதனை தொழில்முனைவை உதாரணமாகக் கொண்டு பிரதமர் விளக்கினார். ஒரு தனிநபர் மிகப்பெரும் நிறுவனத்தை உருவாக்குகிறார், அந்த நிறுவனத்தின் சூழ்நிலை பல்வேறு அறிவு மிக்க தனி நபர்களின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது, அவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றனர் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

தேசிய கல்விக் கொள்கையின் மூலம்  வழங்கப்பட உள்ள நெகிழ்வுத் தன்மை, புதுமையான கற்கும் முறைகள் முதலியவற்றை இளைஞர்கள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் உயர்ந்த லட்சியங்கள், திறமைகள், புரிதல், விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேம்பட்ட தனிநபர்களை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட கல்வி, தொழில்முனைவு வாய்ப்புகள்  இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் அடிக்கோடிட்டுக் கூறினார்.‌ “இளைஞர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல தூண்டாத வகையிலான ஒரு சூழலியலை உருவாக்க முயன்று வருகிறோம்”, என்று பிரதமர் கூறினார்.

தன்னம்பிக்கையான, தெளிவான மனதுடைய, அச்சமில்லாத, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர் தான் அங்கீகரித்தார் என்று பிரதமர் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின் தாரக மந்திரங்களை திரு மோடி இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். உடற்நல தகுதிக்கு “இரும்பை போன்ற தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளும்” என்பது. ஃபிட் இந்தியா இயக்கம், யோகா, நவீன வசதிகளை விளையாட்டுத் துறையினருக்கு அளித்து அரசு ஊக்குவித்து வருகிறது.  தனித்தன்மை மேம்பாட்டிற்கு “உங்களை நம்புங்கள்” என்பது சுவாமி விவேகானந்தரின் அறிவுரை; தலைமைப் பண்பு மற்றும் குழு சார்ந்த பணிகளுக்கு “அனைவரையும் நம்புங்கள்” என்று சுவாமி தெரிவித்தார்.

Exit mobile version