“பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதாக உள்ளது .முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
– பிரதமர் நரேந்திர மோடி
பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மற்றும் மாத வருமானம் ரூ. 15,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 50 சதவீத பங்களிப்பை வழங்கும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் கண்ணியத்தை உறுதி செய்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவு பணியாளர்கள், தலைச் சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், ஒலி-ஒளி தொழிலாளர்கள் அல்லது இது போன்ற பிற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாவர். இ-ஷ்ரம் தளத்தின் படி, 2024 டிசம்பர் 31 நிலவரப்படி 30.51 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.