கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலையில் அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிழற்குடையின் கூரை மீது கைப்பிடி சுவர் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில், சென்ட்ரிங் பலகைகளை அப்புறப்படுத்த முற்பட்டபோது கைப்பிடி சுவர் தானாக இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கட்டுமான பணி நிறைவடையாத நிலையில், கைப்பிடி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையாக கட்டுமான பணி நடைபெறவில்லை என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.