கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற திருநெல்வேலி, பல்லடம் பாஜக பொதுக் கூட்டங்களுக்கு திரண்ட லட்சக்கணக்கிலான மக்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அதனால் தான், தனது பிறந்தநாளை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் புலம்பித் தீர்த்திருக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் . அதில், ‘பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார். அவர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது’ எனக் கூறியிருக்கிறார். பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரியவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கி உள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் ஆதரவு ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்பில், இந்தத் தேர்தலில் பாஜக மட்டும் 18 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறும் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கலக்கத்தால் தான், பிரதமரை முதலமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். திருநெல்வேலி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற லட்சணக்கான மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக தடைபோட்டு வருவதைச் சுட்டிக் காட்டினார்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், ‘எந்தத் திட்டத்திற்கு திமுக அரசு தடையாக இருந்தது?’ எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். எல்லாவற்றையும் பிரதமரே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதில் திமுக செய்து வரும் தாமதத்தால், கோவை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு நிற்கிறது. சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை திட்டத்திலும் தமிழகப் பகுதியில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்கு திமுக அரசே காரணம்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் நலனுக்கான ‘நவோதயா பள்ளிகள் திட்டத்தை’ திமுக ஏற்க மறுக்கிறது. மேலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய திமுக அரசு மறுத்துள்ளதால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு, திமுக அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
இதுபற்றி நாடாளுமன்றத்திலேயே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அரசு நிர்வாகம் என்று வரும்போது மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணக்கமாகச் செல்ல வேண்டும். அப்போதுதான், மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
ஆனால், ஊழல், குடும்ப ஆட்சிக்கு தடையாக மத்திய பாஜக அரசு இருப்பதால், மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையைத் திமுக கடைப்பிடித்து வருகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக, பிரதமர் வீட்டு வசதி திட்டம், குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது, திமுக. திமுகவின் ஏமாற்று வேலைகள் இனியும் எடுபடாது.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் திரும்பத் திரும்ப மத்திய அரசு மீது திமுக குறை சொல்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதில் பல தடைக் கற்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் நலனுக்காக, திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பாஜக அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி அரசு அமைந்ததும், மதுரையில் பிரம்மாண்டமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















