சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

அரசியலில் இருந்து ஓய்வு என சசிகலா அறிவித்திருப்பது ஒரு காலமும் அவர் உண்மையினை பேசவே மாட்டார் என்பதை இப்பொழுதும் நிரூபித்திருக்கின்றது

சசிகலா ஒரு காலமும் அரசியலில் நேரடியாக இருந்தவர் இல்லை, கில்லி படம் முழுக்க திரிஷா விஜய் முதுகு பின்னால் நின்றது போல காலமெல்லாம் ஜெயாவுக்கு பின்னால்தான் இருந்தார்

எந்த இடத்திலாவது சசிகலா நேரடி அரசியல் செய்தாரா? சசிகலா தலமையில் பொதுகூட்டம், சசிகலா தலமையில் போராட்டம் என என்றாவது யாராவது பார்த்ததுண்டா?

சசிகலா கட்சி அரசியல் பதவியில் இருந்தவர் அல்ல, அவர் ஒரு கவுண்சிலராக கூட இருந்ததே இல்லை

ஜெயா எனும் யானைக்கு தன் பலம் தெரியாத அளவு அவரை கட்டி வைத்து தவறான போதனைகளை கொடுத்து எதையெல்லாமோ சாதித்து கொண்டிருந்தவர் சசிகலா

கருணாநிதிக்கும் தங்களுக்கும் காங்கிரசுக்கும் ஒரு ரகசிய தொடர்பு இருப்பதை அவர் உணர்ந்திருந்தார், ஊழல் அரசியலில் அது தவிர்க்கமுடியாதது என்பதும் அவருக்கு புரிந்தது

ஆனால் விதி சுப்பிரமணிய சாமி உருவில் ஆட, நிமிடத்துக்கு ஒருமாதிரி உருமாறும் கருணாநிதி சட்டென அதிமுகவினை பலவீனபடுத்த பல ஆட்டங்களை ஆடினார், பின் பழையபடி சமரசமானார்கள்

இப்படி திரைமறைவிலே ஆடிகொண்டு பல்லாயிரம் கோடி சொத்துக்களை சேர்த்து கொண்டு சசிகலா குடும்பமும் கருணாநிதி குடும்பமும் வலம் வந்தன‌

சசிகலா எதிர்பாரா விஷயங்கள் மூன்று

முதலில் ஜெயாவின் இறப்பு, அதை கூட ஓரளவு கணித்து அடுத்து ஆட்சியினை பிடிக்கும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார்

ஆனால் நடராஜனின் மரணமும் பாஜகவின் எழுச்சியும் அவரை எழவிடாதாவறு அடித்தன, அவர் எதிர்பாரா விஷயம் இவை

“சசிகலா ஒரு நாள் முதல்வராவார் அன்றுதான் போயஸ் கார்டனில் கால்வைப்பேன்” என பகிரங்கமாக சவால்விட்டு அந்த சவாலின் கடைசி படியினையும் நெருங்கினார் நடராஜன்

ஆனால் தர்மத்தின் விதி பாஜக உருவில் வந்து ஆடிற்று, யாரும் எதிர்பாரா ஆச்சரியங்களெல்லாம் நடந்தன‌

ஜெயா இல்லாமல், நடராஜன் இல்லாமல் தத்தளித்த் சசிகலா மிகவும் நம்பியது திமுகவின் தலமையினையே

ஆம் எக்காலமும் திமுக அதிமுக எனும் மோதலில் தமிழகம் சிக்கி இருந்தால்தான் தேசிய கட்சியோ இல்லை மூன்றாம் அணியோ இங்கு உருவாகாது என்பது கருணாநிதி தந்திரம்

இதில்தான் காமராஜர்,மூப்பனார், விஜயகாந்த் , வைகோ என எல்லோரும் சரிக்கபட்டனர்

இப்போது கருணாநிதி இருந்தால் எப்படியாவது அதிமுக அரசை கலைத்துவிட்டு அதிமுகவின் நிரந்தர தலமையாக சசிகலாவினை கொண்டுவந்திருப்பார்

அதற்கு அவரின் பினாமியான நடராஜன் நிச்சயம் உதவியிருப்பார்

இப்போதுள்ள திமுகவிடம் இப்படிபட்ட திட்டங்களையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, அவர்கள் உலகமே தனி

ஏதோ ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனாக தன்னை நினைக்கும் அத்தலமை கடாரம் பிடிக்க போகின்றேன் என அண்டார்டிக்கா நோக்கி சென்று கொண்டிருகின்றது

19 வருடம் திமுக மத்தியில் இருந்த பொழுது தண்டிக்கபடாத சசிகலாவும் ஜெயாவும் பாஜக அரசு வந்தவுடன் தீர்ப்பை பெற்றனர் என்பதிலே காங்கிரஸும் திமுகவும் எந்த அளவு சசிகலாவோடு ரகசிய இழை கொண்டிருந்தது என்பது புரியும்.

இப்படி நடராஜன், ஜெயா, கருணாநிதி என யாருமே இல்லா சசிகலா தடுமாறினார், தினகரனை நம்பி 20 ரூபாய் டோக்கனை தவிர ஏதும் செய்யமுடியாது என்பது அவருக்கு விளங்கிற்று

இயக்குநர், கேமராமேன், வசனகர்த்தா என யாருமே இல்லாத நடிகைபோல் தடுமாறிய சசிகலா தனக்கு இருந்த ஒரே வழியான புறவாசல் வழியாக ஓடிவிட்டார்

அதாவது எப்படி வந்தாரோ அப்படியே ஓடியும் விட்டார்

மற்றபடி அவர் அரசியலில் இருந்ததே இல்லை என்பதால் அவர் ஒதுங்க அவசியமே இல்லை

இந்த உலகில் எல்லோரும் ஆட ஒரு காலம் உண்டு, ஆடி அடங்கவும் ஒரு காலம் உண்டு அதற்கு யாரும் தப்ப முடியாது

சசிகலா ஆட ஒரு காலம் இருந்தது, இனி அவர் பெவிலியனில் இருந்து காட்சிகளை காணவேண்டிய காலம்

தமிழகத்தில் யார் எல்லாமோ ஆடி அடங்கிய அரசியலில் அவரும் அடங்கி செல்கின்றார் என்பதன்றி விஷயம் வேறேதுமல்ல‌

அகில இந்திய அளவில் ஒரு தேசிய கட்சி தேசாபிமானம் கொண்டு ஊழலுக்கு அப்பாற்பட்டு எழும்பினால் இந்த பிரிவினைவாத தேசவிரோத மாநில ஊழல் கட்சிகளெல்லாம் என்னாகும் என்பதற்கு சசிகலா பெரும் எடுத்துகாட்டு

ஆம் இன்று சசிகலா நாளை கருணாநிதி குடும்பம்

தமிழகத்தை ஆட்டிவைத்த இரு குடும்பங்களில் ஒரு குடும்பம் இப்பொழுது அரசியலில் இருந்து விரட்டபடுகின்றது

அதிமுகவின் வோட்டு வங்கி அப்படியே இருக்கும் பொழுது சசிகலா தூக்கி எறியபடுவதெல்லாம் காலத்தின் ஆட்டமன்றி வேறல்ல..ஒரு வகையில் இது பெரும் ஆச்சரியமும் கூட‌

இன்னொரு குடும்பம் சில வருடங்கள் கழித்து விரட்டபடும், காலம் அதை நிச்சயம் செய்யும், தர்ம சக்கரம் சுழலும் பொழுது தலைதலைமுறையாக எக்குடும்பமும் நின்று நிலைத்து அதிகாரம் செய்துவிட முடியாது

சசிகலாவின் விலகல் அதிமுகவுக்கு புது தைரியத்தை கொடுத்திருப்பது உண்மை, இனி நடப்பது காலத்தின் கையில் இருக்கின்றது

திமுக நம் எதிரி எனும் வகையில் சில உண்மைகளை உணர்ந்து அவர் வழிவிட்டு சென்றிருப்பது சொல்வது இதைத்தான்

ஆம், இனி பாஜக + அதிமுக எனும் தேசிய கூட்டணி அதற்கு எதிராக பிரிவினைவாத + மொழிவாத+ இந்து எதிர்ப்பு திமுக கூட்டணி என தமிழக அரசியல் களம் மாறுகின்றது

அதற்கு ஆசீர்வாதம் கொடுத்து ஒதுங்கியிருக்கின்றார் சசிகலா.

கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்

Exit mobile version