அதிகார துஷ்பிரயோகம் ஆளும் கட்சியின் அராஜகம்:ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், நேர்மை தவறி செயல்படுகின்றனர் என்பதற்கு, நீலகிரி கலெக்டராக இருந்த இன்னசென்ட் திவ்யா மாற்றம் ஒரு உதாரணம்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: நாட்டின் முதல் உயிர்ச் சூழல் மண்டலமாக, ‘யுனெஸ்கோ’ அமைப்பால் அறிவிக்கப்பட்ட பகுதி நீலகிரி. அது, பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. அங்கு தான், அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள் உள்ளன.
நீதிமன்ற உத்தரவு

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருக்கும் வனப்பகுதிகளில், உணவு, நீர் நிலை, இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக குறிப்பிட்ட வலசை பாதைகளை, யானைகள் காலம் காலமாக தங்கள் வழித்தடங்களாக பயன்படுத்தி வருகின்றன.

‘ஹார்ட் ஆப் தி எலிபென்ட் காரிடார்’ என்று சொல்லப்படும், முதுமலைப்பகுதியில் இருக்கும் யானைகள் வழித்தடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதிகளவில் காட்டேஜ்கள், ரிசார்ட்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால், யானைகளின் வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளன.இதை உயிரின பாதுகாவலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். யானைகள் வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ல் வழக்கு தொடர்ந்தார்.

நீலகிரியின் முதுமலையை சுற்றிலும் உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும், 7,000 ஏக்கர் பரப்பளவில், 821 காட்டேஜ்கள் யானைகள் வழித்தடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, காட்டேஜ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தற்போது, இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானைகள் வழித்தட மீட்பு குழுவில் முக்கியமானவரான இருக்கும் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை, அந்த பணிகள் முடியும் வரை அங்கிருந்து மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டது.

மிரட்டல்

இதையடுத்து, யானைகள் வழித்தட வரைப்படத்தையும், அறிக்கையையும் இன்னசென்ட் திவ்யா தயார் செய்தார். யானைகள் வழித்தடம் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ரிசார்ட்களையும், கட்டடங்களையும் கண்டறிந்து, அந்த விஷயங்களை அறிக்கையில் இடம் பெற செய்து, அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வரைபடம் உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டால், யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டாக வேண்டும்.அதனால், விதிகளை மீறி கட்டடம் கட்டியவர்கள், வரைபடத்தில் தங்கள் கட்டடம் இடம் பெறாமல் இருக்க, உள்ளூர் அரசியல்வாதிகள் வாயிலாக, இன்னசென்ட் திவ்யாவை அணுகி உள்ளனர்.ஆனால், யாருடைய சிபாரிசையும் ஏற்காமல், உச்ச நீதிமன்றத்தில் தன் அறிக்கையை திவ்யா தாக்கல் செய்து விட்டார்.
இந்த நிலையில் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தி.மு.க.,வின் மேல் மட்டத்தில் இருக்கும் பலரையும் பிடித்து, திவ்யாவை அங்கிருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரிசார்ட் உரிமையாளர்களும், தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் முயற்சித்துள்ளனர்.

பலர், திவ்யாவை மிரட்டி உள்ளனர். ‘வீட்டில் இருப்போரை கடத்துவோம்’ என்றுகூட கூறியுள்ளனர். இதனால், தன் உடல் நிலையை காரணம் காட்டி, திவ்யா நீண்ட விடுப்பில் சென்றார். நவ., 5ல் பணிக்கு திரும்ப முயற்சித்த போது, அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், அவர் விடுப்பை நீட்டித்து விட்டார்.
ஏற்கனவே, இந்த பிரச்னை முடியும் வரை, திவ்யாவை இடம் மாற்றம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால், நிர்வாக காரணங்களுக்காக கலெக்டரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் திடீரென மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உடனே, வழக்கு போட்டவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்ட நீதிமன்றம், நீலகிரி கலெக்டரை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கி விட்டது.

சட்ட போராட்டம்

இதை தொடர்ந்து, அவசர அவசரமாக இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டு, அம்ரித் என்பரை நீலகிரி மாவட்ட கலெக்டராக அறிவித்து, அவரும் உடனடியாக பதவி ஏற்று விட்டார். இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டால், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களையும், ரிசார்ட்களையும் காப்பாற்றி விடலாம் என்று தொழிலதிபர்களும், ரிசார்ட் உரிமையாளர்களும், அவர்களால் பலன் அடையும் ஆளும்கட்சியினரும் நினைக்கின்றனர்.

இந்த விஷயத்தை, தமிழக பா.ஜ., பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இந்த விவகாரத்தில், இனி பா.ஜ., தனி கவனம் செலுத்தும். எங்கும் தவறு நடக்காதபடி பார்த்து கொள்ளும். புதிய கலெக்டர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதும் கண்காணிக்கப்படும். தவறு நடந்தால், உடனே தட்டிக் கேட்போம். அதற்காக, சட்ட போராட்டம் நடத்தவும் தயார். அது மட்டுமல்ல, நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட காட்டேஜ்கள் பலவற்றை, இன்னசென்ட் திவ்யா மூடிசீல் வைத்துஉள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில், கட்டடம் கட்டும் அனுமதி கொடுக்கும் அதிகாரம் ஊராட்சி மன்றங்களுக்கு இருந்திருக்கிறது. அதை மாற்றி, கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுத்தினார். இதனால், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும், சம்பாதிக்க முடியாமல் போனதால், திவ்யாவை மாற்ற துடித்துள்ளனர்.ஆளும் கட்சியினருக்கும், சட்டவிரோத கும்பலுக்கும் இணக்கமாக செல்லவில்லை என்பதால், திவ்யாவை மாற்றி உள்ளனர்.

அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக அரசு மாற்றிடம் வழங்கவில்லை. இதுவும் ஒரு அதிகாரிக்கு இழைத்திருக்கும் துரோகம் தான்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, இப்படிப்பட்ட அராஜகங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது தான். அதற்காக, எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, பா.ஜ., கடந்து போகாது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

Exit mobile version