நடிகர் சூர்யா அவர்களுக்கு வணக்கம் – இப்படிக்கு ஒரு அரசுப்பள்ளி மாணவன்-சமூக வலைதளங்களில் ட்ரெண்டான பதிவு!

உங்களுடைய நீட் எதிர்ப்பு கடிதம் பார்த்தேன். மிக அருமை. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வினால் கேள்விக்குறியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களிடம் சில கேள்விகள்

  1. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை நீங்கள் கூறிய சமூக நீதியை காக்கும் +2 மதிப்பெண் மூலமாக MBBS மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்த பொழுது மொத்தமாக இருந்த 29925 இடங்களில் வெறும் 213 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே MBBS கிடைக்கப்பட்டு படித்தார்கள். அது வெறும் 0.7%. அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் சூர்யா?
  2. அரசுப்பள்ளிகளுக்கு வருடம் 20000 கோடிகள் ஒதுக்கப்பட்டும் அங்கு மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லையே அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் சூர்யா?
  3. உங்களுடைய அகரம் பவுண்டேசன் மூலம் 2016 ம் வருடத்திற்கு முன்னால் எவ்வெளவு அரசு பள்ளி மாணவர்களுக்கு MBBS படிப்பதற்கு உதவியுள்ளீர்கள் என்ற லிஸ்ட் பொதுவெளியில் வெளியிட முடியுமா?? அதை எடுத்துப்பாருங்கள் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களின் நிலைமை தெரியும்
  4. தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பாடத்திட்டம் 13 வருடங்களாக திருத்தப்படாமல் மாணவர்கள் blueprint எனப்படும் மனப்பாடம் செய்யும் முறை மூலம் கிணற்றுத்தவளைகளாக வளர்க்கப்பட்ட பொழுது எங்கே போனீர்கள் சூர்யா??
  5. AIIMS, JIPMER, AFMC போன்ற இந்தியாவின் தலைசிறந்த மருத்தவ கல்லூரிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வு இல்லாத பொழுது ஒருவர்கூட சேரவில்லையே அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் சூர்யா??
    (நீட் தேர்வு வந்த பிறகு 2020 ம் ஆண்டு 30+ தமிழ்நாட்டு மாணவர்கள் AIIMS, JIPMER & AFMC ல் சேர்ந்துள்ளார்கள்.)
  6. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் IIT , NIT போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சேர முடியவில்லையே அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் சூர்யா??
  7. நீட் 2019 ம் ஆண்டு தேர்வில் இந்தியாவின் தேர்ச்சி சராசரி 56.50% .தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி சராசரி 48.77%. நீட் 2020 தேர்வில் இந்தியாவின் தேர்ச்சி சராசரி 56.44%(எந்த மாற்றமுமில்லை). ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி சராசரி 9% அதிகரித்து 57.44% என்று தேசிய சராசரியை விட அதிகமாகி உள்ளது தங்களுக்கு தெரியுமா??
  8. 20 வருடங்களாக நுழைவுத்தேர்வு நடத்திவரும் கேரளாவை விட நம் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதல்முறையாக 8ஆவது இடம் பிடித்ததாவது தெரியுமா??? தேசிய அளவில் 8ம் இடம் பிடித்த மாணவன் புதிதாக திருத்தப்பட்ட மாநில பாடத்திட்டத்தில் படித்தவன் என்பதாவது தங்களுக்கு தெரியுமா???
  9. நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம் முறையாக கோச்சிங் போக வாய்ப்பு கிடைக்காமல் உள்ள மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று. வருடம் 20000 கோடிகள் (75% Salary and perks) செலவிடப்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களைபோன்றவர்கள் குரலெழுப்பலாமே?? அரசுப்பள்ளிகளில் முறையாக கல்வி கொடுக்கப்பட்டால் எதற்க்காக கோச்சிங்??. டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு 443 அரசு பள்ளி மாணவர்கள் மாணவர்கள் நீட் தேர்வை விட கடினமான JEE தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்கள். மேலும் 53 அரசு பள்ளி மாணவர்கள் மாணவர்கள் IIT களில் இடம் கிடைக்கப்பெற்று சேர்ந்தார்கள். டெல்லி போன்ற யூனியன் பிரேதேசங்களால் முடிவது நம் தமிழ்நாட்டால் முடியாதா??
  10. இந்த கடிதத்தை பார்க்கும் பொழுது என் மேல் உங்களுக்கு கோபம் கூட வரலாம் ஆனால் யோசித்து பாருங்கள் ஒரு மாணவனால் முடியவில்லை என்றால் அந்த மாணவனுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அவனை மற்ற மாணவனுடன் சரிசமமாக ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டுமா?? அல்லது மேலே சென்று கொண்டிருக்கும் மற்ற மாணவர்களையும் கிழ்நிலைக்கு கொடுவரவேண்டுமா??
  11. நம் மாணவர்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களுக்கு சரியான களம் கிடைத்துள்ளது நம் மாணவர்களின் திறமை அசாத்தியமானது அவர்கள் நிச்சயம் தேசிய அளவில் மிகப்பெரிய சாதனை செய்வார்கள் அவ்வாறு திறமை உள்ள மாணவர்களை தங்களின் சுயலாபத்திற்காக திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை விட்டுவிடுங்கள்.
  12. இதை எழுதுவதற்கு காரணம் நீங்கள் கூறும் அரசு பள்ளிகளில் எனக்கு ஏற்பட்ட ரணங்களே காரணம். நீங்கள் கூறும் அரசுப்பள்ளியில் படித்தவன் நான். எனக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்கள் தெரியுமா?? நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது காவேரி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லி என் ஆசிரியர்கள் பங்காரப்பாவின் மனைவியை கெட்ட வார்த்தையில் திட்டுவதற்கு சொல்லி கொடுத்தார்கள். இந்த கொடுமைகள் நடந்த பொழுது எங்கே போனீர்கள் சூர்யா??
    (மேலே குறிப்பிட்டுள்ளதுபோல் ஆயிரம் ஆயிரம் ரணங்கள் எங்களுக்கு ஏற்பட்டது)


உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள் அது உண்மையை கூறும் எப்பொழுதுமே மனச்சாட்சியின் படி நடப்பவர்கள் அறத்தின் வழி செல்பவர்கள் நன்றி.

இப்படிக்கு
ஒரு அரசுப்பள்ளி மாணவன்

Exit mobile version