நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு டோக்கியோ ஒலிம்பிக் 2021.

ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி. சி.ஏ.பவானி தேவி, (வாள் சண்டை), திரு.எ.சரத் கமல், திரு.ஜி.சத்தியன் (மேசைப் பந்து), திரு.கே.சி.கணபதி (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசால், தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்திலும், (Special Scholarship Scheme for Elite Sportspersons) மற்றும் திரு.வருண் எ.தக்கர், செல்வி. நேத்ரா குமணன் (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய இருவரும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திலும் (Mission International Medal Scheme)  பயனாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவைகளில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றல், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகள், அயல்நாடுகளில் பயிற்சிகள், இதர வசதிகளுக்காக அவர்களின் தேவைக்கேற்ப ஆண்டொன்றுக்கு முறையே ரூ.25,00,000 மற்றும் ரூ.10,00,000 வீதம் தமிழ்நாடு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்காணும் ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, இந்த ஆணையத்தின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Exit mobile version