ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆக.,4க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்திய தொல்லியல்துறை அறிவியல்பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை கடந்த 14ல் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆக.,4 க்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ‛பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Exit mobile version