ராமேஸ்வரத்தில் 108 அடி உயரத்தில் அமையும் ஹனுமான் சிலை.

ராமேஸ்வரம், பிப்ரவரி 23, 2022: ஹனுமான்ஜி சார் தாம் திட்டத்தை தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா 2008-ம் ஆண்டு மேற்கொண்டார். இதில் முதல் கட்ட நடவடிக்கையானது சிம்லாவில் ஜாகு மந்திரில் 2010-ம் ஆண்டு நிறைவுபெற்றது. அப்போதைய இமாசலப் பிரதேச முதல்வர் பேராசிரியர் பிரேம்குமார் தூமலால் திறந்து வைக்கப்பட்டது. இவர் மத்திய அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாகுரின் தந்தையாவார். 

இரண்டாவது சிலையானது குஜராத் மாநிலம் மோர்பியில் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணி மார்ச் 2022-ல் நிறைவுபெற உள்ளது. தற்போது பிப்ரவரி 23, 2022-ல் மிக உயரிய ஹனுமான் சிலை தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் நிறுவ அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஹெச்சி நந்தா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நிகில் நந்தா மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸ்பளே முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீ ஆர்.என். சௌபே (ஐஏஎஸ், யுபிஎஸ்சி முன்னாள் செயலர்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

ஹனுமான்ஜி சிலையானது இந்த வரிசையில் மூன்றாவதாகும். சிம்லாவில் ஜாகு மலையிலும், குஜராத் மாநிலத்தில் மோர்பியிலும் இரண்டு சிலைகள் ஸ்ரீ ஹரீஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. 

ஜாகு மலை ஹனுமான் சிலையானது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளது. இது 2010-ம் ஆண்டு சிம்லாவில் நிறுவப்பட்டது. உலகிலேயே மிகவும் உயரமானதாகும். இதன் மொத்த உயரம் 8,100 அடி. இங்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஜாகு ஹனுமான்ஜியை தரிசிக்கின்றனர். இது நவீன வழிபாட்டு தலமாகவும், ஹனுமானை தரிசிக்க மேற்கொள்ளும் புனிதப் பயண இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இந்த முக்கியமான திட்டம் குறித்து தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா, அறங்காவலர், ஹெச்சி நந்தா அறக்கட்டளை கூறியதாவது: “`ஸ்ரீ ஹனுமான்ஜி மீதான பக்தி, எனது ஈடுபாடு 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஹனுமான்ஜியின் ஆசிர்வாதத்தில் நான்கு இடங்களில் ஹனுமான் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அவரது அனுக்ரஹத்தில் இத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் தெற்குப் பகுதியில் ராமேஸ்வரம் மிகவும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் ஸ்ரீ ராமரின் பாதத் தடங்கள் இந்த மண்ணில் தான் பதிந்தன. அந்த இடத்தில் அவரது தீவிர பக்தரான ஹனுமான்ஜிக்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்திலிருந்துதான் ஹனுமான் இலங்கைக்கு தாவிச் சென்றார். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரில் அவருக்கு சிலை நிறுவுவது சிறந்ததாக இருக்கும். இப்பகுதி மேலும் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாறும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்தச் சிலையை வடிவமைக்கும் பணிகள் மார்ச் 2022-ல் தொடங்கும். இந்த சிலை உருவாக்கம் அடுத்த 2 ஆண்டுகளில் முழுமைபெறும் என்ற குறிப்பிட்ட நிகில் நந்தா, இந்த மாபெரும் சிலை அமைப்பதற்கான செலவு மதிப்பு குறித்து தகவல் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த மொத்த திட்டப் பணிகளின் மதிப்பு ரூ. 100 கோடிக்கு மேலாகும். அதில் நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட மற்ற பிற செலவுகளும் அடங்கும் என்றார்.

விழாவில் பங்கேற்ற ஸ்ரீ தத்தாத்ரேய ஹோஸ்பளே, அகில இந்திய ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கூறுகையில், “இந்தியர்கள் அனைவருக்குமே ராமேஸ்வரம் மிகவும் புனிதமான இடமாகும். இப்பகுதியில் ஹனுமானுக்கு சிலை அமைப்பது இப்பகுதியின் பெருமையே மேலும் அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் இப்பகுதி மேலும் சுபிக்ஷமடையும். அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வர வழி ஏற்படுத்தும். கடவுள் ராமர் இங்கு இருந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. இதே இடத்தில் அவரது பிரதான சீடரான ஹனுமாருக்கும் சிலை உருவாக்குவது மிகவும் பொறுத்தமாக இருக்கும். அது இந்த நகருக்கும் பெருமை சேர்க்கும்” என்று குறிப்பிட்டார்.

தகவல் ZEE NEWS

Exit mobile version