சென்னையில் நடைபெற்ற கூட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து

தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதை தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய சென்னையில், அலைகடலெனத் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

நமது பிரதமர் அவர்கள் பேசுகையில், ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, நம் தமிழ் மக்கள் தமக்கு சக்தியையும் வலிமையையும் வழங்குவதாகவும், திறமைகள், வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளி சென்னை, வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் என்றும் பெருமையுடன் தெரிவித்தார். தமிழகத்துக்கும் தமக்கும் இடையேயான உறவும் அன்பும் மிகவும் பழமையானது என்று தெரிவித்த நமது பிரதமர் அவர்கள், தமிழக மக்கள் ஆதரவு பாஜகவுக்கு வலுவடைவது, தமிழகத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும், சிலர் கண்களை உறுத்துவதையும் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த பாரதத்துடன், வளர்ச்சியடைந்த தமிழகத்தையும் உருவாக்க உறுதி மேற்கொண்டிருப்பதாகவும், பாரதத்தை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற, சென்னையின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்ட நமது பிரதமர், மத்திய அரசு, சென்னை உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதையும், ஸ்மார்ட் நகரங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான அம்ருத் திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் சென்னை விமான நிலையத் திட்டங்கள் என சென்னையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதையும், சென்னை மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய பல திட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருப்பதையும் குறிப்பிட்டார். மேலும், சென்னை துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் இடையேயான சாலை வசதியை மேம்படுத்தவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றி வரும் அதே வேளையில், தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு, சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகளை, கனவுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் குறிப்பிட்டுக் கூறிய நமது பிரதமர் அவர்கள், சென்னையில் பெய்த புயல் மழை வெள்ளம் காரணமாக மக்கள் அவதிக்குள்ளான நேரத்தில், திமுக அரசு மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, மக்களின் துயரத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தும் வேலையைத்தான் செய்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். பேரிடர் காலங்களில், திமுக நீர் மேலாண்மையை செய்யாமல், ஊடக மேலாண்மையை மட்டும்தான் செய்கிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். மக்கள் வெள்ளத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, ஊடகங்களில், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று செய்திகள் வரச் செய்தார்கள். தமிழகம் குறித்தும், தமிழக மக்களின் துன்பங்கள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் திமுகவுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்றும், நமது பிரதமர் அவர்கள், வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பாஜகவின் மத்திய அரசு, சாமானிய மக்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருவதையும், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் அரசாகச் செயல்பட்டு வருவதையும், நமது பிரதமர் அவர்கள் எடுத்துக் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களும், தடுப்பூசிகளும் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் பலனடையும்படி இலவசமாக வழங்கியதையும், தமிழகத்தில் பெருமளவில் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பல லட்சம் கோடி ரூபாய் கடனுதவி அளித்து, அந்தத் தொழில்களை நம்பியுள்ள எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ததையும் நினைவு கூர்ந்தார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இலவச வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, சாலைகள், மருத்துவக் காப்பீடு, ரயில் போக்குவரத்து என பல லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டங்கள், பொதுமக்களுக்கு நேரடியாகச் சென்றடைகின்றன. இந்த நிதியைக் கொள்ளை அடிக்க வாய்ப்பு கிடைக்காததுதான் திமுகவின் வருத்தம். ஒரு குடும்பம் முழுவதுமே இதனால் மத்திய அரசின் மீது கோபத்தில் இருப்பதாகவும், குறைந்தபட்சம், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் கூட வெற்றி கிடைக்காததால் திமுக கடும் எரிச்சலில் இருப்பதாகவும் நமது பிரதமர் தெரிவித்தார். மேலும், இத்தனை ஆண்டுகள் திமுகவினர் கொள்ளை அடித்த பணம் மீட்கப்பட்டு, மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பதையும், ஆனால், தமது தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்காக உழைப்பதையும் எடுத்துக் கூறிய நமது பிரதமர் மோடி அவர்கள், சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி, சுமார் 18,000 கிராமங்களில், சுமார் இரண்டரை கோடி மக்களுக்கு மின்சார வசதி வழங்காமல் வைத்திருந்ததையும் நினைவுகூர்ந்தார். இன்று கல்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள அணு உலை, செயல்படத் தொடங்கும்போது, எரிசக்தி துறையில், இந்த தொழில்நுட்பம் உடைய நாடுகளில், இந்தியா உலகில் இரண்டாவது நாடாக உயரும் என்றும் பெருமையுடன் தெரிவித்தார். மேலும், கடந்த 50 நாட்களில், நாடு முழுவதும் தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் உற்பத்திக்கான பல ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். மேலும், சில நாட்களுக்கு முன்பாக, தூத்துக்குடியில், பசுமை ஹைட்ரஜன் மூலம் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது குறித்தும் நினைவுபடுத்தினார்.

மேலும், பிரதமரின் சூரிய சக்தி வீடுகள் திட்டத்தின் மூலம், ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளில் சோலார் தகடுகளைப் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியமும் வழங்கி, உபரி மின்சாரத்தை அரசாங்கமே மக்களிடம் இருந்து விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளும் இந்தத் திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பலனடைவார்கள் என்றும் தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் நமது பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தி கூட்டணி கட்சிகள், அவர்களது குடும்பத்தினருக்கு முன்னுரிமை என்று செயல்படுகிறார்கள். ஆனால், நமது பிரதமர் அவர்கள், தேசத்திற்கு முன்னுரிமை எனச் செயல்படுவதையும் கூறி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள இந்த நாட்டு மக்கள் அனைவரும் தமது குடும்பம் என்றும், இளைஞர்கள், குழந்தைகள், விவசாயிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தமது குடும்பம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தி கூட்டணி கட்சிகள், ஊழலில் ஊறிப்போன கட்சிகள். இவர்களுக்கு லஞ்சம், ஊழல் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாததால், இன்று செயலற்றுப் போயிருக்கிறார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சியினர், மக்களை அடிமைகளைப் போல நடத்துகிறார்கள். இன்று உச்சநீதிமன்றம், இத்தகைய குடும்ப அரசியல் செய்யும் திமுக அமைச்சர் ஒருவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. குடும்ப அரசியல் என்ற அதிகார மமதையில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை அவதூறாகப் பேசிய அந்த அமைச்சரை, உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருப்பதையும், இதன் பின்னரும் அவர் அமைச்சர் பதவியில் தொடர்வது கவலையளிப்பது என்றும் நமது பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழகத்தில், ஆட்சியில் இருக்கும் கட்சி ஆதரவில், போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பது, தமது மனதை வருத்தமடையச் செய்திருப்பதாகவும், நமது வருங்கால சந்ததியினரான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள்கள் விற்பனை, பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்த நமது பிரதமர் அவர்கள், குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் முழு ஆதரவுடன், பாஜக போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதே மோடியின் கேரன்டி என்றும் உறுதி அளித்தார்.

வளர்ச்சியடைந்த தமிழகத்துக்காக, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா சாத்தியமாகும் என்றும் கூறிய நமது பிரதமர் அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம் என்றும் சூளுரைத்தார். மேலும், ஒட்டுமொத்த தமிழகமுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததைப் போல பெருமளவில் திரண்டு வந்து அன்பும் ஆதரவும் ஆசிகளும் அளித்த தமிழக மக்கள், எதிர்க்கட்சிகளுக்கு, தனது மனமார்ந்த நன்றிகளையும் நமது பிரதமர் அவர்கள் தெரிவித்து விடைபெற்றார்.

-மாநில தலைவர் K.அண்ணாமலை தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Exit mobile version