“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவின் ஆதரவை கோரினர்.

தமிழ்நாடு பாஜக, அதிமுகவின் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கவில்லை. அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? இல்லையா? என்பது குறித்தும் எதனையும் தெரிவிக்கவும் இல்லை. மேலும் இடைத்தேர்தலில் நின்றுதான் பாஜக பலத்தை கட்ட வேண்டிய தேவை இல்லை எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அண்ணாமலை இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக அணிகளில் எந்த அணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிற குழப்பமான நிலையில் அண்ணாமலையின் எடப்பாடியுடனான இந்த சந்திப்புகள் முக்கியமானதாகும்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.இதையடுத்து, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது:- தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராகவே உள்ளனர். திமுகவுக்கு எதிராகவே அதிமுக உருவானது.

திமுகவை எதிர்க்க ஒருங்கிணைந்த அதிமுக, பாஜகவே தேவை. பாஜக நிலைப்பாடு குறித்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் கருத்தை இரு தலைவர்களிடம் எடுத்து கூறினோம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தால் தான் திமுகவை எதிர் கொள்ள முடியும். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 7ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version