“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என தெரிவித்து இருந்தார். 

இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார்.இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியுமா? எனவும் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அண்ணாமலை, “திமுகவினருடன் ஊழல் குறித்து விவாதிக்க, நான் தயார். நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் ரஃபேல் கடிகாரத்தை வாங்கினேன்.அதன் ரசீது மற்றும் என் வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் சமர்ப்பிக்கிறேன். ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்” என தெரிவித்தார்.

மேலும் “தமிழ்நாடு முழுவதும் நான் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த பாதயாத்திரையின் முதல் நாளில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, “இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா?” என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version