வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.
ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
இதனைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார். போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின.
எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர்.
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு சில பகுதிகளில் இன்டர்நெட் சேவையை முடக்கி மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
டெல்லி பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் அவர்களை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் வெளியானது.
இதன்பின் டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.
இதேபோன்று போலீசாரில் சிலர் தீரத் ராம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு மத்திய மந்திரி அமித்ஷா நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின்னர் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















