பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா வெற்றிகரமாகப் பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரிட்டன் செய்தி ஊடகத்திற்குப் பேட்டி கொடுக்கப் போய் லைவ் ஷோவில் அசிங்கப்பட்டு இருக்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சியான Sky News-இல் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், நேரலையில் பேட்டி அளித்திருக்கிறார். இந்தியா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்தும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைபாடு குறித்து எடுத்துரைத்த அத்தாவுல்லா தரார் இதில் தான் சிக்கி சின்னாபின்னமானார் . இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியதாக அட்டாவுல்லா தரார் தெரிவித்த நிலையில், அடுத்து யால்டா ஒரே ஒரு விஷயத்தை தான் சொன்னார்.அதற்கே அவர் பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டுப் போனார்.
செய்தியாளர்
அதாவது முதலில் செய்தியாளர் யால்டா, “இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும், பாகிஸ்தான் ராணுவ மையம் அல்லது பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளதே” என்று கேட்டார். அதற்கு அட்டாவுல்லா தரார்,இந்தியா பொதுமக்கள் வசித்த பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன், பாகிஸ்தானில் எந்தப் பயங்கரவாத முகாம்களும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. நாங்கள் ஏற்கனவே எங்கள் மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 90 ஆயிரம் பேரை கொன்றுள்ளோம்.
ஆவேசமாக ஆரம்பிச்சாரு
ஆனால், மறுபுறம் இந்தியா என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.. ஜாபர் எக்ஸ்பிரஸை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்..அதை இந்தியா கண்டிக்கக்கூட இல்லை.. அந்தச் சம்பவம் குறித்து எந்தக் கவலையும் தெரிவிக்கவில்லை” என்று அவர் பாட்டிற்குப் பேசிக் கொண்டே போனார். அப்போது குறுக்கிட்ட யால்டா ஒரே ஒரு பாயிண்டை தான் முன்வைத்தார்.
அடுத்த நொடி அசிங்கப்பட்டார்
அதாவது கடந்த வாரம் தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவால் தனது நாடு பயங்கரவாதத்தை ஆதரித்ததாகவும் மோசமான வேலையைச் செய்து வந்ததையும் ஒப்புக் கொண்டதைச் சுட்டிக்காட்டினார். யால்டா மேலும் கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்பு தான், எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற உங்கள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், பாகிஸ்தான் பல ஆண்டுகளாகப் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவளித்து வந்ததை ஒப்புக்கொண்டார்.
2018ஆம் ஆண்டில் கூட பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் குற்றஞ்சாட்டியே அதிபர் டொனால்ட் டிரம்ப் உங்கள் ராணுவத்திற்கான நிதியுதவியை நிறுத்தினார். எனவே, நீங்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று சொல்வது, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியதற்கும் எதிராக உள்ளது” என்றார்.
வசமாக மாட்டிக்கிட்டார்
பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்தார். பிறகு சில நொடிகள் கழித்து ஏதேதோ சொல்லி சமாளித்தார். அப்போதும் தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாகிஸ்தானுக்கு வந்து அதைப் பார்க்கும்படியும் யால்டாவுக்கு அமைச்சர் அட்டாவுல்லா தரார் அழைப்பு விடுத்தார்.
அதற்கும் யால்டா, “நான் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வந்துள்ளேன். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார். அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மீண்டும் இதை எதிர்பார்க்காத தரார் உளரத் தொடங்கினார். இப்படி லைவ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அவர் அசிங்கப்பட்டு விழித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.