”இந்திரா பெயரில் திட்டங்கள் இருந்தபோது புரிந்தது; தற்போது பிரதமர் பெயரில் திட்டங்கள் இருந்தால் மட்டும் உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா,” என, தி.மு.க., – எம்.பி.,க்கு, மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கிடுக்கிப்பிடி போட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி தொகுதி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார் பேசியதாவது:’பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்பதன் ஆங்கில அர்த்தம் என்ன; இதற்கு எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கே இதற்கு அர்த்தம் தெரியவில்லை. தொகுதி மக்களுக்கு எப்படி புரியும்?
மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் ஹிந்தியிலேயே பெயர் வைக்கப்படுகிறது.மற்ற மாநில மக்களுக்கு புரியாத மொழியில் பெயர் வைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இவ்வாறு நீங்கள் செய்வது ஒரு வகையில் எங்களுக்கும் நல்லது தான்.இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது:தர்மபுரி தொகுதிஎம்.பி., ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்பதன் அர்த்தம் புரியவில்லை என்கிறார். எனக்கும் தான் அவர் கேட்பது புரியவில்லை; காரணம், இதே திட்டம், ‘இந்திரா ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் இருந்தபோதெல்லாம் அவருக்கு புரிந்துள்ளது.
ஆனால், இப்போது பிரதமர் பெயரில் இருக்கும்போது மட்டும் அவருக்கு அர்த்தம் தெரியாமல் சிரமம் வந்து விடுகிறதோ? பிரதமர் பெயரில் உள்ள திட்டம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புரிகிறது; அவருக்கு மட்டும் புரியவில்லை என்றால் பாவம் தான்.இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதில்லை. மாநில அரசுக்குத் தான் நிதியை ஒதுக்கீடு செய்கிறோம். அவர்கள்தான் அங்கு நடைபெறும் பணிகளுக்கு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்
தகவல் தினமலர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















