திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் கொடூர தாக்குதல் – குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரரை அடுத்த வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கனிமொழி திமுகவை சேர்ந்தவர். அவரது வயலில் வேறொருவரின் மாடுகள் மேய்ந்ததுள்ளது.இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழியின் கணவர் மற்றும் அவரது அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் மாட்டின் உரிமையாளர் வீடு புகுந்து தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 8 நபர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட பிரச்னையில், வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி உறவினர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார், 20க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் வந்து வீட்டில் இருந்த பொருட்களையும், குழந்தைகள் பெண்கள், அனைவரையும் சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து காவல்துறையிடம் கூறியபோது, அவர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்று வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழியின் கணவர் மற்றும் அடியாட்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால். காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் இது குறித்து காவல்துறையினர் காயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் தரப்பு அவர்கள் வயலில் வேலை செய்தவர்களை தாக்கிவிட்டதாகக் கூறி எந்தவொரு காயமும் இல்லாத நிலையில் தாங்களாகவே மருத்துவமனையில் உள்நோயாளியாக அட்மிட் ஆகிவிட்டனர். இதில் ராஜேந்திரன் என்பவர் தலித் ஆவார். அவரைத் தாக்கியதாக எதிர் தரப்பினர் மீது புகார் கொடுத்து அவர்களனைவர் மீதும் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்த சிவக்குமார் தரப்பில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பூதலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்களைத் தேடி வருகின்றனர்.

நல்லவேளையாக, இச் சம்பவத்தில் தாக்கிய மற்றும் தாக்குதலுக்குள்ளான ஆகிய இரு தரப்பினரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுவே இரு வெவ்வேறு ஜாதியினரிடையே நடைபெற்றிருந்தால் இந்நேரம் எங்களோட ‘ட்ரவுசர்’ கிழிஞ்சிருக்கும் எனக்கூறி நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் போலீஸார்.

நன்றி : அங்குசம்

Exit mobile version