திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை


திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார்.


மருத்துவமனையில் இறந்துவிட்டார். இப்படியாக மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் வெற்றிக்கான முன்னுரையை வேட்புமனுத்தாக்கல் தொடக்கத்திலேயே எழுதத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைத்த பிறகு அவர்களில் மிக
விசுவாசியாக நடந்து கொள்வதில் தமிழக காவல்துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலை பார்க்கும்போது, மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையையே மிஞ்சிவிட்டது.

இன்னும் சொல்லப்போனால் மாநில தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு திமுகவின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அவலத்தை தமிழக மக்கள் முகம் சுளித்து பார்த்துக் கொண்டிருந்தனர். மாநில தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு… அதனிடம் அரசியல் கட்சிகள்
வாலாட்ட முடியாது என்பது சட்டம்… ஆனால் தமிழகத்தில் நடைபெற்றது மகாமட்டம். ஆளும் கட்சியின் உத்தரவை நிறைவேற்றும் அடிமைகளாக தேர்தல்
ஆணையம் இங்கு நடந்து கொண்டதை மத்திய அரசும் நீதிமன்றமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


தேர்தலை நேர்மையாக நடத்துவது ஆணையத்தின் தார்மீக பொறுப்பு அதிலும் இம்முறை நீதிமன்றம் தலையிட்டு எச்சரிக்கைகள் விடுத்தபோது தமிழகத்தில்
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என்று மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு உறுதி அளித்திருந்தது
ஆனால் நடந்தது வேறு அது நேர்மாறு அது நேர்மைக்கும் மாறு வாக்குச்சாவடியும், வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு கட்டிடமும், வாக்கு எண்ணும்
மையமும் ஆன இவையெல்லாம் மிகவும் முக்கியமான தளங்கள் இங்கெல்லாம் கண்காணிப்புக் கேமரா வெறும் கண்துடைப்புக்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தது.

பல கேமராக்கள் வேலை செய்யவில்லை ஒரு சில கேமராக்கள் வேலை செய்தபோதும் அவையெல்லாம் திமுகவை எதிர்ப்பவர்களை உள்ளே விடாது தடுக்க
மட்டுமே பயன்பட்டது.ஆட்சியை தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே தான் கொடுத்த வாக்குறுதிகளில் எல்லாம் பின்வாங்கி திமுகவின் அரசியல் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதால்,ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசினார்கள். ஆட்சி தொடங்கியவுடனேயே தாங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதை அவர்கள் உணர்ந்திருந்தாலும், அது தேர்தலின் மூலமாக வெளிப்பட்டு விடக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்தின் துணையுடனும் காவல் துறையினரின் அராஜகத்துடனும் திமுகவினர் சாதுரியமாக சதிச் செயல்களை செய்தனர்.

மக்களின் நம்பிக்கையை இழந்த திமுகவின் இந்த அச்ச உணர்வு மிக வெளிப்படையாகத் தெரிந்தது தோழமை அதிமுக கட்சியின் நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி கைதுசெய்யப்பட்டனர். அவர்களையெல்லாம் தேர்தல் பணியை பார்க்க விடாது தடுப்பதற்காக திமுக அரசு காவல்துறையின் உதவியுடன் மாற்றுக் கட்சியினரை பல தொகுதிகளில் கைது செய்தனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படவில்லை.


இடங்களில் வாக்கு எண்ணிக்கை மிகத் தாமதமாகவும் சில இடங்களில் மாற்றுக் கட்சியினரை வெளியேற்றிய பின் ரகசியமாகவும் நடைபெற்றது, உண்மைக்கு மாறாக வாக்கு எண்ணிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டன. சில இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்த கொடுமையும் நடைபெற்றது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் வேட்பாளர்கள் தடுக்கப்பட்ட போதும்,
பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்ட போதும், காவல்துறையினர் அத்துமீறிய போதும்,பாரதிய ஜனதா கட்சிக்கும், எங்களது தோழமை கட்சியினருக்கும் வாக்களித்த
ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும். கடினமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பாஜகவின் தோழமைக் கட்சியின் தொண்டர்களுக்கும் எங்கள்
அன்பையும், நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version