தமிழக இளஞர்கள் பல பேர் தற்போது இன்ஸ்டாகிராம், போதை , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வேற்றுக்கிரக வாசிகள் போல ஊருக்குள் வலம் வருகின்றனர். குறிப்பாக இந்த ரீலிஸ் மோகத்தால் கலாச்சாரமே சீர் கேட்டு வருகிறது. உழைக்காமல் காசு சம்பாதிக்க பெட்ரூம் வரை கேமரா செல்கிறது. டபுள் மீனிங்கில் பேசுவது ஆபாச வார்த்தைகளில் பாட்டு பாடுவது என ஒழுக்க சீர்கேட்டு அலைகிறார்கள். இதில் யூடுப் லைவ் பெட்ரூம் சீன்கள் தான் அதிகம். இந்த நிலையில் பணக்கார சிறுவர்களை குறிவைத்துள்ளது சில குருப் பலர் பார்ப்பதற்கு பவ்யமாக இருப்பார்கள் ஆனால் செய்வது எல்லாம் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் நாயகனை விட பத்து மடங்கு சேட்டைகள் இருக்கும்.. அப்படிப்பட்ட பையன்களை குறிவைத்து சென்னையில் ஒரு கடத்தல் கும்பல் செயல்பட்டு வனத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த மிளகாய் வியபாரியின் மகன், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். இவருக்கு, இரவு நேரங்களில் நண்பர்களுடன் பைக் ரைடுக்கு செல்லும் போது கோவையை பூர்வீகமாக கொண்ட 17 வயது சிறுவனின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் சென்னையில் தங்கி DJ வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில், கடந்த 16 ஆம் தேதி DJ சிறுவன் அழைத்ததின் பேரில், பள்ளி மாணவன் பைக்கில் இரவு ரைடுக்கு புறப்பட்டுள்ளார். சென்னை முத்தியால் பேட்டை, மதுரவாசல் தெருவில் உள்ள டீ கடை முன்பு காத்திருந்தார். அங்கு DJ சிறுவன் வரவில்லை. அவனிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து சாட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் வந்து, அங்குக் காத்திருந்த மாணவனிடம், தன்னை அருகில் உள்ள பகுதியில் டிராப் செய்யும் படி லிப்ட் கேட்டுள்ளார்.
மாணவனும் அவரை பைக்கில் ஏற்றி சிறிது தூரம் சென்றதும், இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற ஆட்டோ ஒன்றின் அருகே நிறுத்த கூறி உள்ளார் லிப்ட் கேட்ட ஆசாமி. பைக்கை நிறுத்தியதும் அவர் கத்தியை காட்டி மிரட்டி மாணவனை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றதாகவும், பிறகு ஆட்டோவை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கு வைத்து மாணவனை கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். “ஒரு வாரத்திற்குள் ஒரு லட்ச ரூபாய் பணமும், வீட்டிலிலுள்ள நகைகளையும் எடுத்துவந்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை சித்ரவதை செய்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மாணவன் தன்னை விட்டு விடும் படி கெஞ்சி கேட்ட போது, கன்னத்தில் அறைந்து தாக்கிய அந்த கும்பல், “உனது அம்மா, அப்பா, வீட்டு முகவரி அனைத்தும் எங்களுக்கு தெரியும். நீ தரவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து விடுவோம்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு மாணவனை அதே ஆட்டோவில் ஏற்றி கடத்திய இடத்தில் இறக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தார் அந்த மாணவர்.
இதையடுத்து, தனக்கு நடந்த சம்பவத்தை மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதன் பிறகு, மாணவனின் தந்தை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.
போலீசார் மாணவனை அழைத்து விசாரணை நடத்தினர். மாணவனை நைட் பைக் ரைடுக்கு அழைத்த DJ நண்பனை பிடித்து விசாரணை நடத்தினர். மாணவன் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் சிறிது சிறிதாக பணத்தை எடுத்து, பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றும் போது அந்த DJ சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பைக் ரைடு மூலம் நண்பர்களாகி இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு, அந்த கோவை சிறுவன் ராயபுரம் பிஆர்என் கார்டன் பகுதியில் ஜூஸ் குடித்து கொண்டிருந்த போது, சிலர் ஆட்டோவில் கடத்திச் சென்று அவனிடம் இருந்து 1300 பணத்தை பறித்துள்ளனர் . மேலும் அதிக செலவு செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்களை தங்களிடம் காண்பிக்கவேண்டும் என உயிர் பயத்தை காட்டி மிரட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த கும்பல் அடிக்கடி கோவை சிறுவனை போனில் பேசி மிரட்டி வந்ததால், மாணவனை அந்த கும்பலுடன் கோர்த்துவிட்டுள்ளார், என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஜி என்ற விஜயகுமார், பரத், டீக்கடைக்காரர் ரஞ்சித், ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார் ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும், ஆட்டோ ஓட்டுனர் வசந்தகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில், கோவையைச்சேர்ந்த DJ சிறுவன் ‘வேப்’ போதை சிகரெட்டைக் கொடுத்து, மாணவனை வலையில் வீழ்த்தியதாகவும் இதனைத் தொடர்ந்து அதே வழியில் மற்ற மாணவர்களை வலையில் வீழ்த்த முயற்சித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சிறுவனிடம் வேப் போதை சிகரெட்டைக் கொடுத்து கடத்தல் கும்பல் மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை செய்துகொண்டிருக்கிறது, காவல்துறை. இதேபோன்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
மேலும், முகம் தெரியாத நபர்களோடு பள்ளி மாணவ- மாணவிகள் சமூக வலைத்தளங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது எனவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.