ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை.

கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில் கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் படங்கள் பொறுத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய்யான தகவல். பாதுகாப்புத்துறை அமைச்சகம் தான் இதற்கு அனுமதி வழங்கும்.

அதற்கு பலகட்ட பேச்சுவார்த்தை நடக்கும். நேரம் கருதி எல்லா மாநிலங்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைக்காது. முழு விவரங்களையும் திரட்டிவிட்டு இதுதொடர்பான தகவல்களை சொல்கிறேன்.தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி கருத்து சுதந்திரம் அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. வஞ்சகமான முறையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை சட்ட ரீதியாக அணுகுவோம்.

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது, சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பா.ஜ.க-விலிருந்து விலகி செல்கின்றனர். உ.பி., தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்.பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையதல்ல.

இதை கண்டித்து வருகிற 21-ம் தேதி பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பொங்கல் பரிசில், தமிழக அரசு வெல்லம் உருகும் என்று சொல்கின்றனர். விஞ்ஞான ஊழலுக்கு, எப்போதும் ஒரு விஞ்ஞான பதிலை தான் சொல்வார்கள்.

வெல்லம் உருகுவது தொடர்பாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை. தி.மு.க-வின் கிரவுன் பிரின்ஸ் உதயநிதி, நகைக் கடன் தள்ளுபடியில் இருந்து எல்லாவற்றையும் சரவணா ஸ்டோர்ஸில் பொருள்களை விற்பது போல சொல்லிவிட்டு இப்போது எஸ்கேப் ஆகிவிட்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் என்னை அவதூறாக பேசுவதோடு,

மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார். ஆனால் தி.மு.க இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க உறுதியாக உள்ளது. தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லைப்பெரியாறு அணைகளின் நம் உரிமைகள் பறிபோகும்” என்றார்.

Exit mobile version