இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !


உக்ரைன் போரில் குவாட் நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

ஆனால் குவாட் நாடுகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைனை ஆதரிக்காமல், நடுநிலையாக இருக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.ஒருவகையில் இந்தியாவிற்கு இது அனைத்து பக்கங்களில் இருந்தும் வெற்றியை கொடுக்கும் வெளியுறவுக்கொள்கையாக அமைந்து உள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியாவும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்  இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 


பாகிஸ்தானில் உள்ள தனது கட்சியின் சொந்தப் பகுதியான கைபர் பக்துன்க்வாவில் உள்ள மலகண்ட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் பேசும் போது கூறியதாவது:-
எங்கள் அண்டை நாடான இந்தியாவை நான் பாராட்டுகிறேன். அவர்கள் எப்போதும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இன்று, இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது.இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மக்களுக்கான கொள்கை. குவாட் நாடுகள் எதிர்க்கும் என்று அஞ்சாமல் இந்தியா செயல்படுகிறது. அமெரிக்கா பற்றி அஞ்சாமல் இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குகிறது. ஏனெனில் அவர்களின் கொள்கை மக்களின் முன்னேற்றத்திற்காக உள்ளது.இந்தியாவின் முடிவுகளில் அந்த நாட்டு ராணுவ தலையீடு இல்லை. இந்தியாவை நான் வணங்குகிறேன், என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் பாராட்டி பேசியிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் பாஜ்வா மற்றும் இம்ரான் கான் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. திட்டமிடப்படாத இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-ன் தலைவர் நதீம் அஞ்சும் பங்கேற்றார்.கூட்டத்தின்போது இம்ரான் கானை  இருவரும் கண்டித்ததாகவும், அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராணுவ தளபதி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version