ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக இரு பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க எங்கள் பெண்களே போதும் என நேரடியாகவே பாகிஸ்தானை சாடி இருக்கிறது இந்தியா
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியுள்ளது. இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு உலகின் முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு. தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் உறுதியாக இருப்போம்” என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர், “தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். இந்தியா எங்கள் நல்ல நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்ட இலக்குகள் மற்றும் தாக்குதல் குறித்த விவரங்களை இன்று வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே திருப்பித் தாக்கும் வாய்ப்பையே இந்தியா பயன்படுத்தியுள்ளது என கூறியிருந்தார்.
தொடர்ந்து தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேசி, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தாக்குதல் குறித்த விபரங்களை தெரிவித்த இருவருமே ராணுவம் மற்றும் விமானப்படையின் மிகச்சிறந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஆண்களை குறி வைத்து கொலை செய்தனர். நெற்றி பொட்டுக்கு அருகே துப்பாக்கியை வைத்து சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், எங்கள் ஊர் பெண்களே போதும் பாகிஸ்தானை பந்தாடுவதற்கு என்ற செய்தியை நேரடியாக சொல்வது போல் தான் இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் மூலம் பெண்களின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளை பந்தாடியதோடு தாக்குதல் குறித்த விபரங்களை பெண் அதிகாரிகள் மூலம் தெரிவித்து இருக்கிறது. பொதுவாக ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் குறிப்பாக ஆண் அதிகாரிகள் தான் தெரிவிப்பார்கள். ஆனால் முதன் முறையாக பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா என்பது கவனிக்கத்தக்கது.
1972 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி (பிரிகேடியர்) கோவிந்த் சிங் சிசோடியா பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவம் மிகவும் தெளிவாக திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகர்வு தான்.
இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இது ஏதோ குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடத்தப்படும் தாக்குதலாக கருத வேண்டாம். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்தியிருக்கும் தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா விடுத்துள்ள வலுவான செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க நினைத்தால் இந்தியாவின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று எச்சரித்துள்ளார்
கர்னல் சோபியா குரேஷி:
35 வயதாகும் இவர் இந்திய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை செய்த பெண்ணாக திகழ்கிறார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சர்வதேச ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்றிருந்தது. இந்த பயிற்சியில் ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றிருந்தன.
அதில் இந்திய படைக்கு இவர் தலைமையேற்றிருக்கிறார். இதற்கு முன்னர் பெண் அதிகாரிகள் யாரும் இதுபோன்ற சர்வதேச ராணுவ பயிற்சியில் தலைமையேற்றது கிடையாது. அந்தவகையில் இந்த சாதனையை புரிந்த முதல் பெண் அதிகாரி என்கிற பெருமைக்கு கர்னல் சோபியா குரேஷி உரியவராகியுள்ளார்.
அதற்கு முன்னர் காங்கோவில் ஐநா அமைதிப்படையில் ராணுவ பார்வையாளராக இவர் பணியாற்றியிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாக்க பணியாற்றுவது மனதளவில் திருப்தியளிக்கிறது என்ற இவர் கூறியுள்ளார். குஜராத்தை சேர்ந்த இவர், ராணுவ பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்:
இந்திய விமானப்படையின் முக்கியமான பெண் அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார். 2004ம் ஆண்டு பைலட்டாக இவர் தனது பணியை விமானப்படையில் தொடங்கினார். தொடக்கத்தில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார். இதனையடுத்து 2017ம் ஆண்டு விங் கமாண்டராக இவர் பதவி உயர்வை பெற்றார். பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பாதுகாப்பு படையில் பணியாற்றி வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
ஏப்.22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருக்கிறது.
தங்கள் கணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று பெண்கள் வேதனையடைந்திருந்த நிலையில், பெண்களை கொண்டே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய பெண்கள் பூ, பொட்டு, வளையல் என கலச்சாரத்தை தீவிரமாக கடைபிடிப்பதை பாகிஸ்தான் நெட்டிசன்கள் அதிகம் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் பெண் அதிகாரிகளை கொண்டு பதில் கொடுக்கப்பட்டிருப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.