ஆக்ஸிஜன் விநியோகப்பதில் சாதனை படைத்த இந்திய ரயில்வே. ஒரே நாளில் 1,018 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை

நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா அலை அதி வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவில் மிக மிக வேகமாக பரவிவருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் அதிகளவு தேவைப்படுகிறது. இதனையடுத்து மத்தியஅரசு தனக்கு சொந்தமான ரயில்வே துறை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

இந்திய ரயில்வே இதுவரை சுமார் 13,319 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல மாநிலங்களுக்கு 814-க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் விநியோகித்துள்ளது.இதுவரை 208 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை முடித்து பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளன.

தற்போது, 13 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1018 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனுடன் பயணித்து வருகின்றன.கடந்த 5 நாட்களாக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்து வருகின்றன.

உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் என 13 மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக்ஸிஜனை கொண்டு சென்றுள்ளன.

தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3338, மத்தியப் பிரதேசத்துக்கு521, தில்லிக்கு 4110, ஹரியானாவுக்கு 1619, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 714, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழ்நாட்டுக்கு 649, ஆந்திராவுக்கு 292, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 118, தெலங்கானாவுக்கு 772 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version