கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும் – எடியூரப்பா நம்பிக்கை…

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அமித்ஷாவின் கர்நாடக வருகை பா.ஜனதாவிற்கு கூடுதல் வலுசேர்க்க இருப்பதாக அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-  “ரம்ஜான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். கர்நாடகத்துக்கு அமித்ஷா வந்ததும், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். 


முதல்-மந்திரியும், நானும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வோம். இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும். அதிலும் பத்ராவதி தொகுதியை பா.ஜனதா நிச்சயம் வெல்லும். இதற்கான பணிகளில் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் தீவிரம் காட்டவேண்டும்.”  இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version