நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய மகாராஷ்டிரா அமைச்சர் கைது..

தாவூத் இப்ராகிம் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக என்சிபி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை அவரை கைது செய்தது.

ஆதாரங்களின்படி, நிழலுலக தாதாக்கள் மற்றும் நாட்டை விட்டு தப்பியோடிய பயங்கரவாத நிதியாளரான தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ், இக்பால், உதவியாளர் சோட்டா ஷகீல் மற்றும் பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராகுமாறு நவாப் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். 

இதற்கிடையில், என்சிபி கட்சியின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு வெளியே என்சிபி கட்சியினர் கூடி முழக்கங்களை எழுப்பினர். 

தாவூத் இப்ராகிம் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு, “கைது செய்யப்பட்டேன், ஆனால் பயப்பட மாட்டோம். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்” என்று என்சிபி தலைவர் நவாப் மாலிக் கூறினார்.

Exit mobile version