பாகிஸ்தான் சில ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்தது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது காஷ்மீர். தீவிரவாத சம்பவங்கள் எதுவும் இல்லாததால் நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியா மட்டும் அல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர்.
குறிப்பாக தற்போது கோடை காலத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் நீங்கள் இந்துவா என கேட்டு பயணிகள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் சம்பவத்தை நடத்தி விட்டு தீவிரவாதிகள் மறைந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் முப்படைகளும் தயார் நிலையில் இருந்து வந்தது..
இதற்கிடையே இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாலை, ‘சிந்தூர் நடவடிக்கை’ (OperationSindoor) என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு துல்லியமான மற்றும் திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. இது, ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பாகல்கம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா அளித்த உறுதியான பதிலடியாகும். இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது ஆழமான பொருள் கொண்டது. இந்திய கலாச்சாரத்தில், சிந்தூர் என்பது திருமணமான பெண்களின் நெற்றியில் அல்லது தலை பிரிவில் அணியப்படும் ஒரு புனிதச் சின்னமாகும். திருமணமான பெண்கள் கணவரோடு ஹனிமூனுக்கு பஹல்காம் சென்றபோது, ஆண்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்றனர். இதனால் இளம் மனைவிமார்கள் தங்கள் சிந்தூர், அதாவது குங்குமத்தை இழந்தனர். எனவே இதே பெயரில் தனது பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா.
எந்த குங்குமத்தை பறித்தாயோ, அதே குங்குமத்தின் பெயரால் குங்கும கலரிலான உனது ரத்தத்தை பூமியில் ஆறாக ஓட வைக்கிறேன் பார் என்ற ஆவேசம் இந்த தாக்குதலின் பெயரிலேயே எதிரொலிக்கிறது. மே 7ஆம் தேதி அதிகாலை 1. 44 மணிக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது (தீவிரவாத முகாம்)இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 33 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொலைசெய்யப்ட்டுள்ளார்கள்.காஸ்மீர் எல்லைக்குள் 250 கிலோமீட்டர் சென்று இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானை வதம் செய்துள்ளார்கள்.
மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து இன்று விரிவான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது. அதில், இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், என்ன பாதிப்பு ஏற்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை சமூக வலைத்தளத்தில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பதாக பலரும் நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதல் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்தியா ஏவுகணை வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், போர் விமானங்கள் மூலம் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் பின்வருமாறு:
- கோட்லி * முரித்கே * பகவல்பூர் * சக் அம்ரு, குல்பூர்* சியால்கோட் * ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இரண்டு இடங்கள்
இவற்றில் இரண்டாவது இடமான முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் ஆகும். அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பகவல்பூர் என்பது பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ள ஊர் ஆகும். இந்த பகவல்பூர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.