நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், திருக்கோவிலூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அறிவிப்பு வெளியான நிலையில் இடத்தை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இடம் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் அதற்கு உகந்தது இல்லை. மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனை ஏற்காமல் அதே இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட உள்ளனர் என கூறி.திமுக தவிர்த்து அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் பொது மக்களுக்கு உகந்ததாக இல்லை. எனவே அந்த இடத்தை மாற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வரை சென்று மனு கொடுத்துள்ளதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நாளை பூமி பூஜை போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால்; பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் சார் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சார் ஆட்சியர் சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு அதன் பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை நண்பகல் 12 மணி அளவில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி தலைமையில் திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
