புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை, மாநிலங்களுக்கு வழங்க முடியாது’ என்றார்; இது தமிழக அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியது. கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர், ‘பி.எம்.ஸ்ரீ.,திட்டத்தில் மும்மொழிக் கல்விக்கொள்கைகட்டாயம். மும்மொழி கொள்கை என்பது மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி. ஹிந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தமிழகம் தயார்’ என்றனர்.அதைத் தொடர்ந்து தினமும், தி.மு.க., தொண்டர்களுக்கு கடிதம், ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அரசுக்கு எதிரான பதிவுகள் என, இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக, முதல்வர் ஸ்டாலின் மாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி லோக்சபாவில், தி.மு.க., – எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், இப்பிரச்னையை கிளப்பினார்
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைய, தமிழக அரசு ஒப்புக் கொண்டது; கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டது. முதல்வர் ஸ்டாலின் முடிவை மாற்றிய சூப்பர் முதல்வர் யார் என தெரியவில்லை’ என்றார்.
கொந்தளித்த தி.மு.க., – எம்.பி.,க்கள் கோஷமிட, அவர்களை நோக்கி, ‘நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டாம்’ என, தர்மேந்திர பிரதான் சொல்ல, பெரும் சர்ச்சையானது. ‘நாகரிகமற்ற’ என்ற வார்த்தையை, பிரதான் திரும்பப் பெற்றதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.அத்துடன், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து, மத்திய கல்வித் துறை செயலர் சஞ்சய் குமாருக்கு, தமிழக அரசின்அன்றைய தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, 2024 மார்ச் 15ல் எழுதிய கடிதத்தை, ‘எக்ஸ்’ பக்கத்தில் தர்மேந்திர பிரதான் பகிர்ந்தார்.
அதையடுத்து, இப்பிரச்னை மீண்டும் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாக, பா.ஜ., – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.கடந்த, 2018ல், சமக்ர சிக்ஷா அபியான் என்ற, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ப்ரீ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை தரமான, சமமான கல்வி கிடைப்பதும் ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதும், இத்திட்டத்தின் நோக்கம். இதில், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது.பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தமிழகம் இணையாததால், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கென வர வேண்டிய, 1,138 கோடி ரூபாயை, கடந்த ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது
இந்த நிதியை விடுவிக்கக் கோரி, தமிழக அரசு வலியுறுத்தியபோது, ‘பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைந்தால் தான் நிதி ஒதுக்க முடியும்’ என, மத்திய அரசு உறுதியாக கூறி விட்டது.அதைத் தொடர்ந்து, இந்த நிதியை பெறுவதற்காக, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து, கடந்த ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த செய்தி, அப்போதே நாளிதழ்களில் வெளியானது. அதற்கு தமிழக அரசின் தரப்பில், எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இதை சுட்டிக்காட்டும் தர்மேந்திர பிரதான், ‘முதலில் ஒப்புக்கொண்டு கடிதம் எழுதி, முடிவை மாற்றியது ஏன்?’ என்று கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார். ஆனால், ‘பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைய ஒப்புக்கொள்ளவே இல்லை’ என, தமிழக அரசு வாதாடுகிறது. கடந்த ஆண்டு மார்ச் 15ல் மூண்ட தணல், இப்போது பெரும் தீயாக வெடித்து, தமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் பெரும் அனலை கிளப்பியுள்ளது.