தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறியது சரியே என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறிய ராமதாஸ், சூசகமாக கூட்டணி பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக, கூட்டணியை உறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனை இன்னும் ஓயவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். வன்னியர் சங்க மாநாட்டிலும் அந்த பிரச்னை எதிரொலித்தது.
கடைசியாக கடந்த வாரம் அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அன்புமணியும் ராமதாஸை சந்திக்கச் சென்றிருந்தார்.தொடர்ந்து, சென்னை சென்ற ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை மீண்டும் சந்தித்துப் பேசினார். மேலும், அண்மையில் பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராமதாஸின் பேரன் முகுந்தனும் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அமித்ஷாவின் தமிழக வருகை தொடர்பான கேள்விக்கு, “நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பல பிரதமர்களோடு தொடர்பில் இருந்தவன். இப்போதைய பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனாலும் அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
மேலும், அமித் ஷா மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், “தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்பு இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. எனவே ஜனவரி மாதம் தங்கள் கூட்டணி தொடர்பான நிலையை அறிவிப்போம் என தெரிவித்து விட்டது.
பாமகவை பொறுத்தவரை தற்போது உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் இடையே நடைபெறும் மோதல் காரணமாக கூட்டணி தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை. கடந்த தேர்தலில் தான் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனச் சொன்னதாக ராமதாஸே கூறி இருந்தார். இதற்கிடையே தான் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே பாமக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.பா.ம.கவை உடைத்து திமுக பக்கம் கொண்டுவர போடப்பட்ட பிளான் சுக்குநூறாகி உள்ளது. இதனால் அப்செட்டுடன் உள்ளது அறிவாலயம்!