தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்ளது. இங்கு நேற்று காலை 6.15 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெறுவதை அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஷேக் அப்துல்லா வீட்டின் முன் திரண்டு, என்ஐஏ சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற சோதனை 2 மணி நேரம் நடந்தது. ஒட்டன்சத்திரம் சும்சுதீன் காலனியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முகமது யாசின் வீட்டிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் கொடைக்கானல், பூம்பாறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி கொடைக்கானல் நகர் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த இன்தாத்துல்லா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
