பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களிடையே நடந்த கலந்துரையாடல் தமிழில்.

இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்….

ராம்கம்பா தேஜா:  வணக்கம் ஐயா.

மோதிஜி:  ராம் அவர்கள் தானே பேசறீங்க?

ராம்கம்பா தேஜா:  ஆமாங்க, ராம் தான் பேசிட்டு இருக்கேன்.

மோதிஜி: சரி ராம், வணக்கம்.

ராம்கம்பா தேஜா: வணக்கம், வணக்கம்.

மோதிஜி:  கொரோனா வைரஸ் பரவியிருக்கற இந்த வேளையில நீங்க அயல்நாடு போயிருந்ததா கேள்விப்பட்டேனே, அப்படியா?

ராம்கம்பா தேஜா:  ஆமாங்கய்யா.

மோதிஜி:  சரி, நான் உங்ககூட பேச விரும்பினேன்.  சொல்லுங்க ராம், இப்படிப்பட்ட தீவிரமான சங்கடகாலத்தில அயல்நாட்டில இருந்திருக்கீங்க, உங்க அனுபவத்தை நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்.

ராம்கம்பா தேஜா:  நான் தகவல்தொழில்நுட்பத் துறையில பணியாற்றுற ஒரு ஊழியர்.  வேலை காரணமா சில சந்திப்புக்கள் பொருட்டு நான் துபாய் போயிருந்தேன்.  நாடு திரும்பினவுடனேயே எனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருச்சு.  ஒரு 4-5 நாட்களுக்குப் பிறகு மருத்துவர்கள் எனக்கு கரோனாவுக்கான பரிசோதனை செஞ்சு பார்த்தப்ப, எனக்கு நோய் பீடிப்பு இருந்ததா கண்டுபிடிச்சாங்க.  உடனடியா என்னை ஹைதராபாதில இருக்கற காந்தி அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க.  இதன் பிறகு தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நான் குணமாயிட்டேன், இப்ப என்னை வீட்டுக்கும் அனுப்பிட்டாங்க.  இது எல்லாமே கொஞ்சம் பயமாத் தான் இருந்திச்சு.

மோதிஜி:  அதாவது நோய் பீடிப்பு பத்தி உங்களுக்குத் தெரிய வந்திச்சு, ஆனா அதுக்கு முன்னாலயே இது எத்தனை பயங்கரமானதுன்னு தெரிஞ்சிருந்திச்சா, ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!!

ராம்கம்பா தேஜா:  ஆமாங்கய்யா.

மோதிஜி: அப்ப இந்தத் தொற்று ஏற்பட்டிருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்ச அந்தக் கணத்தில உங்க உணர்வு என்னவா இருந்திச்சு?

ராம்கம்பா தேஜா:  முதல்ல நான் கொஞ்சம் பயந்தேன் தான், எனக்கு இந்த மாதிரி ஆயிப் போச்சுன்னு என்னால நம்பவே முடியலை, இது எப்படி எனக்கு வரலாம்னு தான் நினைச்சேன்.  ஏன்னா இந்தியாவுல இது அப்ப 2-3 பேர்களுக்குத் தான் வந்திருந்திச்சு, யாருக்கும் இதுபத்தி அதிகம் தெரிஞ்சிருக்காத நேரம்.  மருத்துவமனையில என்னை அனுமதிச்ச போது என்னை மருத்துவரீதியா தனிமைப்படுத்தி இருந்தாங்க.  முத 2-3 நாட்கள் அது பாட்டுக்குப் போயிருச்சு. ஆனா அங்க இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் எல்லாரும் ரொம்ப இனிமையா நடந்துக்கிட்டாங்க. ஒவ்வொரு நாளும் என்னைக் கூப்பிட்டு என்கூட பேசுவாங்க, எனக்கு மனோதைரியத்தை அளிப்பாங்க, ஒண்ணும் ஆகாது, சீக்கிரமாவே சரியாயிருவீங்கன்னு சொல்லுவாங்க.  பகல் வேளையில 2-3 முறை மருத்துவர்கள் பேசுவாங்க, செவிலியர்கள் பேசுவாங்க.  முதல்ல பயம் இருந்திச்சுன்னாலும், பிறகு மெல்ல மெல்ல, இத்தனை நல்ல ஆளுங்களோட நான் இருக்கேன், என்ன செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும், நான் சீக்கிரமே சரியாயிருவேன்னு எனக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பிச்சுது.

மோதிஜி: குடும்பத்து உறுப்பினர்களோட மனோநிலை எப்படி இருந்திச்சு?

ராம்கம்பா தேஜா:  நான் மருத்துவமனையில சேர்க்கப்பட்ட போது, அவங்க முதல்ல ரொம்ப மன அழுத்தத்தில இருந்தாங்க, அவங்க எல்லாருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாங்க, ஆனா யாருமே பாதிக்கப்படலை, இது எங்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்.  பிறகு ஒவ்வொரு நாளும் மேம்பாடு தெரியத் தொடங்கிச்சு.  மருத்துவர்கள் எங்களோட பேசிட்டு இருந்தாங்க.  அவங்க குடும்பத்தாருக்கும் இந்தச் செய்தியைத் தெரிவிச்சுட்டு இருந்தாங்க.

மோதிஜி: உங்க தரப்புல நீங்க என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டீங்க, உங்க குடும்பத்தார்  என்னஎன்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாங்க?

ராம்கம்பா தேஜா: குடும்பத்தாரைப் பொறுத்தமட்டில, முதல்ல அவங்களுக்கு இது பத்தி எல்லாம் தெரியவந்த போது, அப்ப நான் தனிமைப்படுத்தல்ல இருந்தாலும், இந்தச் செயல்பாட்டுக்குப் பிறகும் மேலும் ஒரு 14 நாட்கள் நான் வீட்டிலயும் என்னோட அறையிலேயே இருக்கணும், என்னை நானே தனிமைப்படுத்திக்கணும்னு சொன்னாங்க.  ஆகையினால வீட்டுக்கு வந்தாலுமேகூட, நான் என் அறையில தனியா இருக்கேன், பெரும்பாலும் நாள் முழுவதும் முகக்கவசம் போட்டுக்கிட்டு இருக்கேன், உணவு எனக்கு அளிக்கப்படும் போது, கைகளை கழுவுதல்ங்கறது ரொம்ப முக்கியமானது.

மோதிஜி: சரி ராம், நீங்க உடல் குணமாகி வந்திருக்கீங்க.  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

ராம்கம்பா தேஜா:  தேங்க்யூ.

மோதிஜி: நீங்க தகவல்தொழில்நுட்பத் துறையில வேலை செய்யறீங்க இல்லையா!!  நீங்க உங்க அனுபவங்களை ஒலிவடிவத்தில பதிவு செஞ்சு, மக்களோட பகிர்ந்துக்கணும்னு நான் விரும்பறேன், இதை சமூக ஊடகங்கள்ல பரப்புங்க.  இதனால என்ன ஆகும்னா மக்கள் பயப்பட மாட்டாங்க, அதே சமயத்தில கவனமா இருப்பாங்க, எப்படி தப்புவது அப்படீங்கற விஷயமெல்லாம் ரொம்ப சுலபமா மக்கள் கிட்ட போய் சேரும்.

ராம்கம்பா தேஜா:  ஆமாய்யா, வெளிய பார்த்தா, இந்தத் தனிமைப் படுத்தலை மக்கள் எப்படி பார்க்கறாங்கன்னா, ஏதோ சிறைக்குப் போகறா மாதிரியா நினைச்சுக்கறாங்க, ஆனா இது அப்படி கிடையாது.  அரசு தனிமைப்படுத்தல்ல ஈடுபடுத்துதுன்னா இது அவங்களுக்காக, அவங்க குடும்பத்தாருக்காகன்னு புரிஞ்சுக்கணும்.  இதுபத்தி நான் நிறைய பேருக்குத் தெரிவிக்கணும்னு விரும்பறேன்; அதாவது பரிசோதனை செஞ்சுக்குங்க, தனிமைப்படுத்தலைப் பார்த்து பயப்படாதீங்க, மருத்துவரீதியான தனிமைப்படுத்தல்னு சொன்னா, இது எந்த வகையிலயும் களங்கமான விஷயம் இல்லைன்னு தெரிவிக்க விரும்பறேன். 

மோதிஜி:  சரி ராம், உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.

ராம்கம்பா தேஜா: தேங்க்யூ தேங்க்யூ

மோதிஜி:  ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே!!

      நண்பர்களே, ராம் சொன்னதைப் போல, கரோனா பெருந்தொற்று ஏற்பட்டவர்களுக்கு என மருத்துவர்கள் பரிந்துரை செய்தவை அனைத்தையும் அவர் தவறாமல் மேற்கொண்டார்; இதன் விளைவாகவே இன்று அவர் முழு உடல்நலன் பெற்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  நம்மோடு இப்படி கரோனாவோடு போராடி வெற்றி பெற்ற மேலும் ஒரு நண்பர் இருக்கிறார், ஆனால் இவருடைய ஒட்டுமொத்த குடும்பமுமேகூட இதனால் பீடிக்கப்பட்டார்கள்.  வாருங்கள், ஆக்ராவைச் சேர்ந்த அஷோக் கபூர் அவர்களோடு நாம் உரையாடலாம்.

மோதிஜி: அஷோக் ஜி வணக்கம்.

அஷோக் கபூர்: வணக்கம் ஜி.  இன்னைக்கு நான் உங்ககூட பேசுறது நான் செஞ்ச பெரிய பாக்கியம்.

மோதிஜி:  இது என்னோட பாக்கியமும்கூட.  நான் ஏன் உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்னா, உங்க ஒட்டுமொத்த குடும்பமுமே கொரோனாங்கற இந்தப் பெரும் சங்கடத்தில சிக்கினாங்கன்னு கேள்விப்பட்டேன்.

அஷோக் கபூர்:  ஆமாங்க, கண்டிப்பா.

மோதிஜி:  உங்க பிரச்சனை பத்தி நான் மேலும் விபரமா தெரிஞ்சுக்க பிரியப்படறேன், இந்தத் தொற்று பற்றி உங்களுக்கு எப்ப தெரிய வந்திச்சு? என்ன ஆச்சு?  மருத்துவமனையில என்ன நடந்திச்சு?  நீங்க சொல்றதைக் கேட்டு நாட்டுல இதனால மக்களுக்கு பயன் உண்டாகும்னா நான் கண்டிப்பா நாட்டுமக்களோட இவற்றை பகிர்ந்துக்க தயாரா இருக்கேன்.

அஷோக் கபூர்:  கண்டிப்பா ஐயா.  எனக்கு ரெண்டு மகன்கள்.  இவங்க இத்தாலிக்குப் போயிருந்தாங்க.  அங்க காலணிகள் கண்காட்சி நடந்திச்சு.  நாங்க காலணி வியாபாரம் செஞ்சிட்டு இருக்கோம், பட்டறையும் இருக்கு, தயாரிக்கவும் செய்யறோம்.

மோதிஜி: சரி.

அஷோக் கபூர்:  இத்தாலிக்குப் போன இவங்க திரும்ப இந்தியா வந்தாங்க.  எங்க மருமகப்பிள்ளையும் போயிருந்தாரு, அவரு தில்லியில வசிக்கறாரு. அவருக்கு கொஞ்சம் பிரச்சனையான உடனே அவரு ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனைக்குப் போனாரு.  அங்க அவங்க அவருக்கு நோய் தொற்று இருக்கறதா சொன்னாங்க.  பிறகு அவங்களே அவரை சஃப்தர்ஜங்குக்கு மாத்திட்டாங்க.

மோதிஜி:  சரி.

அஷோக் கபூர்:  அங்கிருந்து தான் எங்களுக்கு ஃபோன் வந்திச்சு, நீங்களும் அவருகூட போயிருக்கீங்க, உங்களை பரிசோதனை செஞ்சுக்குங்கன்னு சொன்னவுடனே ரெண்டு பிள்ளைகளும் பரிசோதிச்சுக்க இங்க ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்குப் போனாங்க.  ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்காரங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்க கூடாதுங்கறதுக்காக, ஒரு தற்காப்பு நடவடிக்கையா உங்க குடும்பத்தார் எல்லாரையுமே கூட்டிக்கிட்டு வாங்கன்னாங்க.  கடைசியா நாங்க எல்லாருமே போக வேண்டி வந்திச்சு.

மோதிஜி: சரி.

அஷோக் கபூர்:  அடுத்த நாளே அவங்க சொன்னாங்க, உங்க குடும்பத்தார் ஆறு பேருக்கு – அதாவது உங்க ரெண்டு மகன்கள், நான், என் மனைவி, எனக்கே பார்த்தீங்கன்னா 73 வயசாகுது, என் மருமக, என் 16 வயதான பேரன்னு நாங்க 6 பேர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கறதால உடனடியா தில்லி போயிரச் சொன்னாங்க.

மோதிஜி:  அடக்கடவுளே.

அஷோக் கபூர்:  ஆனா ஐயா நாங்க பயப்படலை.  சரி நல்லகாலம் இப்பவே நமக்குத் தெரிய வந்திச்சேன்னு நாங்க தில்லி சஃப்தர்ஜங்க் மருத்துவமனைக்குப் போனோம்.  ஆக்ராவுலேயே எங்களை ரெண்டு ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பி வச்சாங்க.  இதுக்கு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கலை.  ஆக்ரா மருத்துவர்களையும், நிர்வாகத்தையும் சும்மா சொல்லக்கூடாது, முழு ஒத்துழைப்பும் உதவியும் அளிச்சாங்க. 

மோதிஜி:  ஓஹோ, நீங்க ஆம்புலன்ஸ்ல வந்தீங்களா?

அஷோக் கபூர்:  ஆமாங்கய்யா, ஆம்புலன்ஸ்ல தான்.  பெரிய பிரச்சனை இல்லை, உட்கார்ந்தபடியே தான் வந்தோம்.  எங்களுக்கு ரெண்டு ஆம்புலன்ஸ்களை குடுத்தாங்க.  கூடவே ரெண்டு மருத்துவர்களும் வந்தாங்க, அவங்க எங்களை சஃப்தர்ஜங்க் மருத்துவமனை வரை கொண்டு விட்டுப்போனங்க.  சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில ஏற்கெனவே மருத்துவர்கள் வாசல்லேயே தயாரா நின்னுட்டு இருந்தாங்க, அவங்க எங்களை வார்டுக்கு உடனடியா கொண்டு போனாங்க.  எங்க ஆறு பேருக்குமே அவங்க தனித்தனி அறைகளைக் கொடுத்தாங்க.  நல்ல அறைகள், எல்லாமே இருந்திச்சு.  இப்ப நாங்க அங்க 14 நாட்கள் மட்டுமே தனியா இருந்தோம்.  மருத்துவர்கள் பத்திச் சொல்லணும்னா, அவங்க ரொம்பவே உதவிகரமா இருந்தாங்க, எங்களை ரொம்ப நல்லா நடத்தினாங்க, மத்த பணியாளர்களுமே இப்படித்தான்.  அவங்க பாதுகாப்பு உடையில வந்தாங்க இல்லையா, யாரு செவிலியர், யாரு மருத்துவர், யார் வார்ட்பாய்ன்னே தெரியலை.  அவங்க சொல்றதை கேட்டு நாங்க நடந்தோம்.  எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்கலை.

மோதிஜி:  உங்க தன்னம்பிக்கை ரொம்ப பலமா இருக்கா மாதிரி தெரியுதே!!

அஷோக் கபூர்:  ஆமாம் ஐயா, நான் நல்லா இருக்கேன்.  என் கால்மூட்டுக்கு வேற நான் அறுவை சிகிச்சை செஞ்சிருக்கேன்.  இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.

மோதிஜி:  இல்லை, இத்தனை பெரிய சங்கடம் குடும்பத்தார் எல்லாருக்குமே வந்திருக்கு, 16 வயதான பேரன் வரை வந்திருக்கு, இதைத் தாண்டியும் தன்னம்பிக்கையோடு இருக்கீங்களேன்னு கேட்டேன்.

அஷோக் கபூர்:  அவன் ICSE  தேர்வு எழுத வேண்டியிருந்திச்சு.  நாங்க சொன்னோம், தேர்வு எல்லாம் பிறகு பார்த்துக்கலாம், முதல்ல வாழ்க்கைத் தேர்வை பார்ப்போம், கவலைப்படாதேன்னு சொன்னோம்.

மோதிஜி:  சரியா சொன்னீங்க.  உங்க அனுபவம் தான் இதில கை கொடுத்திருக்கு.  குடும்பம் முழுவதுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு, மனோதைரியத்தை ஏற்படுத்தி இருக்கு.

அஷோக் கபூர்:  ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருந்ததால, ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்க முடியலைன்னாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க முடிஞ்சுது. தொலைபேசி வாயிலா பேசிக்கிட்டோம்.  மருத்துவர்கள் எங்களை நல்லவிதமா பார்த்துக்கிட்டாங்க.  நாங்க அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம், எங்களுக்கு முழுக்க முழுக்க துணை வந்தாங்க.  மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், வார்ட் பணியாளர்கள்னு எல்லாருமே நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.

மோதிஜி: உங்களுக்கும் உங்க குடும்பத்தார் எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.

அஷோக் கபூர்: தேங்க்யூ ஐயா. மிக்க நன்றி. உங்க கூட பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.  அப்புறம் இன்னொரு விஷயம்யா…. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தறது தொடர்பா எங்கயாவது போகணும், ஏதாவது செய்யணும்னா நாங்க அதுக்கு தயாரா இருக்கோம்.

மோதிஜி:  நீங்க உங்க வழியில ஆக்ராவுல செய்யுங்க. யாராவது பசியோட இருந்தா,அவங்களுக்கு உணவு கொடுங்க.  ஏழைகளை நல்லா கவனிச்சுக்குங்க, விதிமுறைகளை முறையா பின்பற்றுங்க.  உங்க குடும்பம் முழுவதும் இதில சிக்கியிருந்திச்சு, ஆனா சட்டதிட்டங்களைப் பின்பற்றினதால, நீங்களும் உங்க குடும்பத்தாரும் இதிலேர்ந்து தப்பிக்க முடிஞ்சிருக்கு, ஆகையால எல்லாரும் விதிகளை மதிச்சு நடந்தா, நாடு காப்பாத்தப்படும்னு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க.

அஷோக் கபூர்:  மோதி ஐயா, நாங்க காணொளிகளை ஏற்படுத்தி சேனல்களுக்கு கொடுத்திருக்கோம்.

மோதிஜி:  சரி.

அஷோக் கபூர்:  இதை சேனல்காரங்க காமிக்கவும் செஞ்சிருக்காங்க, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வர்றாங்க.

மோதிஜி:  இதை சமூக ஊடகங்கள்ல பிரபலமாக்கணும்.

அஷோக் கபூர்:  ஆமாம் ஆமாம். நாங்க வசிக்கற காலனி, ரொம்ப சுத்தமான காலனி, அங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம், நாங்க மீண்டு வந்திருக்கோம், யாரும் பயப்பட வேண்டாம். யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.  சந்தேகம் இருந்தா பரிசோதனை செய்துக்குங்க.  எங்ககூட இந்தக் காலகட்டத்தில பழகினவங்க பரிசோதனை செய்துக்கிட்டாங்க, யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இறையருள்ல இல்லைய்யா.

மோதிஜி:  உங்களுக்கு மிக்க நல்வாழ்த்துக்கள்.

      நண்பர்களே, நாம அஷோக் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.  பீதியடையாமல், பதட்டமே படாமல், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது, சரியான நேரத்தில் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது, உசிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் பெருந்தொற்றை நம்மால் வெற்றி கொள்ள முடியும். நண்பர்களே, நாம் மருத்துவரீதியாக இந்தப் பெருந்தொற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள சில மருத்துவர்களோடும் உரையாடினேன், இவர்கள் தானே இந்தப் போரில் முன்னணி வீரர்களாகப் போராடி வருகிறார்கள்!!  நோயாளிகளை கவனித்துக் கொள்வது இவர்களுடைய அன்றாடக் கடமை இல்லையா!!  நாம் இப்போது தில்லியைச் சேர்ந்த மருத்துவர் நிதேஷ் குப்தாவுடன் உரையாடலாம் வாருங்கள்!!

மோதிஜி:  வணக்கம் டாக்டர்.

டாக்டர். நிதீஷ் குப்தா:  வணக்கம் ஐயா.

மோதிஜி:  நிதேஷ்ஜி, நீங்க இந்தப் போர்ல விடாப்பிடியா முயற்சி செஞ்சிட்டு வர்றீங்க, மருத்துவமனையில உங்க மத்த நண்பர்களோட மனோநிலை பத்தி சொல்ல முடியுங்களா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  எல்லாருமே ரொம்ப உற்சாகமா இருக்காங்க.  உங்க ஆசிகள் எல்லாரோடயும் இருக்கு.  எல்லா மருத்துவமனைகளுக்கும் நீங்க கொடுத்து வர்ற ஆதரவு இருக்கே, நாங்க கேட்டதை எல்லாம் கொடுத்திருக்கீங்க.  எப்படி இராணுவம் எல்லைப்புறத்தில போரிடுதோ, அதே விடாமுயற்சியோட நாங்க இங்க உறுதியோட இருக்கோம்.  எங்க கடமை ஒண்ணே ஒண்ணு தான் – நோயாளி உடல்நலம் சீராகி வீடு போகணுங்கறது தான். 

மோதிஜி:  நீங்க சொல்றது சரிதான், இது போர்க்கால நிலைமை, நீங்க எல்லாரும் தான் நிலைமையை எதிர்கொள்ளத் தயாரா இருக்கீங்க. 

டாக்டர். நிதேஷ் குப்தா:  ஆமாம்யா.

மோதிஜி:  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கறது மட்டுமில்லாம நீங்க அவங்களுக்கு உளவியல்ரீதியா ஆலோசனைகளையும் அளிக்க வேண்டியிருக்கு இல்லையா?

டாக்டர். நிதேத் குப்தா:  ஆமாங்கய்யா.  இது ரொம்ப ரொம்ப அவசியம்.  ஏன்னா நோயாளிகள் தாங்கள் பீடிக்கப்பட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்ட உடனேயே பயந்து போயிடறாங்க.  இது ஒண்ணுமில்லை, அடுத்த 14 நாட்கள்ல நீங்க சரியாயிருவீங்க, பிறகு வீட்டுக்குப் போகலாம்னு முதல்ல அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியிருக்கு.  இதுவரைக்கும் இப்படி நாங்க 16 நோயாளிகளை குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கோம்.

மோதிஜி:  அவங்க உள்ளபடியே எதைக்கண்டு பயப்படுறாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?

டாக்டர். நிதேஷ் குப்தா:  எனக்கு என்ன ஆயிடுமோங்கற பயம் தான்.  அவங்க வெளியுலகத்தைப் பார்க்கும் போது, வெளிய பலர் இறந்துகிட்டு இருக்கறதை பார்க்கறாங்க, இப்படி தங்களுக்கும் ஆயிருமோங்கற கவலை அவங்களை வாட்டுது.  ஆனா நாங்க அவங்களுக்கு அவங்க நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கறோம்.  உங்க நிலைமை அத்தனை மோசமில்லை, சாதாரண கபம்-ஜுரம் மாதிரி தான், ஆகையால நீங்க 7-8 நாட்கள்ல சீராயிருவீங்க.  பிறகு உங்களை பரிசோதனை செஞ்ச பிறகு, உங்களுக்கு தொற்று அபாயம் இல்லைன்னு தெரிய வந்தபிறகு வீட்டுக்கு அனுப்பிருவோம்னு சொல்லுவோம்.  ஆகையால திரும்பத் திரும்ப 2-3 மணிநேரத்துக்கு ஒருமுறை அவங்களைப் போய் சந்திப்போம், விசாரிப்போம், இது அவங்களுக்கு இதமா இருக்கும்.

மோதிஜி:  அவங்க தன்னம்பிக்கை அதிகரிக்குது இல்லையா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  தொடக்கத்தில பயம் என்னவோ இருந்தாலும்கூட, நாங்க புரியவச்ச பிறகு, 2-3 நாட்கள்ல அவங்ககிட்ட குணம் தெரிய ஆரம்பிச்சவுடனே, நாம சரியாயிருவோம்னு அவங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை துளிர்க்குது.

மோதிஜி:  எல்லா மருத்துவர்கள் மனசிலயும் மிகப்பெரிய சேவை செய்யற வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கற உணர்வு ஏற்படுதில்லையா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  ஆமாங்கய்யா. கண்டிப்பா ஏற்படுது.  இதில எந்த பயமும் இல்லைன்னு, நாங்க எங்க குழுவினரை தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டே இருக்கோம். நாம முழு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டோம்னா, நோயாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பத்தி புரிய வச்சோம்னா, எல்லாம் சரியாயிரும்.

மோதிஜி:  சரி டாக்டர்.  உங்க கிட்ட ஏராளமான நோயாளிகள் வருவாங்க, நீங்க இதில முழுவீச்சில ஈடுபட்டிருப்பீங்க.  உங்ககூட பேசினது இதமா இருந்திச்சு.  ஆனா உங்க போராட்டத்தில நானும் உங்ககூட இருக்கேன். தொடர்ந்து போராடுங்க.

டாக்டர். நிதேஷ் குப்தா:  உங்க ஆசிகள் தொடரணுங்கறது தான் எங்க எல்லாரோட விருப்பமும்கூட.

மோதிஜி:  பலப்பல நல்வாழ்த்துக்கள் சகோதரரே.

டாக்டர். நிதேஷ் குப்தா: ரொம்ப நன்றிங்கய்யா.

மோதிஜி: நன்றிகள்.  நிதேஷ்ஜி உங்களுக்கு பலப்பல நன்றிகள்.  உங்களைப் போன்றவர்களுடைய முயற்சிகளின் பலனாகத்தான் இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரிலே கண்டிப்பாக வெல்லும்.  நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை பராமரியுங்கள் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள். நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கிறது என்று உலகில் கிடைக்கப்பெறும் அனுபவம் என்ன கூறுகிறது.  இப்படித் திடீரென்று பெருகும் நோய்த்தொற்றின் விளைவாக மிகவும் சிறப்பாக விளங்கிவரும் உடல்நலச் சேவைகள் இருக்கும் நாடுகள்கூட மண்டியிடுவதை நாம் பார்க்கிறோம்.  இந்தியாவில் இத்தகைய நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  இப்போது மேலும் ஒரு மருத்துவர் புணேயிலிருந்து நம்மோடு இணையவிருக்கிறார்.  அவர் டாக்டர் போர்ஸே அவர்கள்.

மோதிஜி: வணக்கம் டாக்டர்.

டாக்டர் போர்ஸே: வணக்கம்.

மோதிஜி:  நீங்க மக்கள் சேவையே மகேசன் சேவைங்கற குறிக்கோளோட பணியாற்றிக்கிட்டு வர்றீங்க.  நான் இன்னைக்கு உங்ககூட சில விஷயங்கள் பத்திப் பேச நினைக்கறேன், நாட்டுமக்களுக்கு நீங்க அளிக்க நினைக்கற செய்தி பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன்.  மருத்துவரோட தொடர்பு கொண்டு எப்ப கரோனா பரிசோதனை செஞ்சுக்கணுங்கறது தொடர்பா பலரோட மனங்கள்ல ஒரு வினா இருந்துக்கிட்டு இருக்கு.  ஒரு மருத்துவர்ங்கற முறையில, நீங்க உங்களையே முழுமையா கரோனா நோயாளிகளுக்குன்னு அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க.  அந்த வகையில உங்க கருத்துக்கள் மகத்துவம் வாய்ந்தவை, நான் கேட்க ஆவலா இருக்கேன்.

டாக்டர் போர்ஸே: ஐயா, நான் இங்க பி.ஜே. மருத்துவக் கல்லூரியில பணிபுரியற ஒரு பேராசிரியர்.  இங்க நாயுடு மருத்துவமனைங்கற பெயர்ல, புணேயில நகராட்சி மருத்துவமனை ஒண்ணு இருக்கு.  இங்க ஜனவரி 2020லேர்ந்து ஒரு பரிசோதனை மையத்தை ஆரம்பிச்சோம்.  இன்னைக்கு வரைக்கும் இங்கிருந்து 16 கோவித் 19 நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்காங்க.  இந்த 16 பேரையும் நாங்க தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்தினோம், சிகிச்சை அளிச்சோம்,பிறகு 7 பேர்களை விடுவிப்பு செஞ்சோம்.  பாக்கி இருக்கற 9 பேர்களுமே ரொம்ப சீரா இருக்காங்க.  அவங்க உடல்ல வைரஸ் கிருமி இருந்தாலுமே கூட, அவங்க நல்லபடியா ஆயிட்டு வர்றாங்க.  இப்ப இங்க மாதிரி அளவு ரொம்ப சின்னது தான், 16 பேர்கள் மட்டும் தான்.  ஆனா, இளைய சமுதாயத்தினர்கூட இதனால பாதிப்படைஞ்சு வர்றாங்கன்னு தெரிய வருது.  இருந்தாலுமேகூட, இந்த நோய் அத்தனை தீவிரமா அவங்களை பாதிக்கலைங்கறதால, அவங்க குணமாயிட்டு வர்றாங்க.  பாக்கி இருக்கற 9 பேர்களுடைய நிலைமையும் மோசமாயிரக்கூடாதுங்கறதால நாங்க அவங்களை தொடர் கண்காணிப்புல வச்சிட்டு இருக்கோம், அவங்களும் 4-5 நாட்கள்ல சரியாயிருவாங்க.  இங்க சந்தேகத்துக்கு இடமான வகையில வர்றவங்க சர்வதேச பயணம் போனவங்க, அவங்ககூட தொடர்புல வந்தவங்க; இவங்களோட மாதிரியை எடுக்கறோம்.  இவங்களோட oropharyngeal மாதிரியை, அதாவது உணவுக்குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதியோட மாதிரியை எடுக்கறோம், மூக்கிலேர்ந்து மாதிரியை எடுக்கறோம், இந்த மூக்கிலேர்ந்து எடுக்கப்பட்ட மாதிரி பத்தின அறிக்கை வந்தவுடனே நாங்க அவங்களை நோய்தொற்று வார்டில அனுமதிக்கறோம்.  ஒருவேளை பாதிப்பு இல்லைன்னா, வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான பரிந்துரை செய்யறோம், இதை எப்படி கடைப்பிடிப்பதுங்கற வழிமுறையை சொல்லிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கறோம்.

மோதிஜி: என்ன புரிய வைக்கறீங்க?  வீட்டில தனிமைப்படுத்தல் பத்தி என்ன சொல்லிக் கொடுக்கறீங்க?

டாக்டர் போர்ஸே: நீங்க வீட்டில இருந்தாலுமேகூட, நீங்க அங்க தனிமைப்படுத்திக்கணும், மத்தவங்க கிட்டேர்ந்து குறைஞ்சபட்சம் 6 அடி இடைவெளி வச்சிருக்கணும்.  அடுத்ததா, முகக்கவசத்தைப் பயன்படுத்தணும், திரும்பத்திரும்ப கைகளை சுத்தம் செய்யணும்.  உங்ககிட்ட கிருமிநாசினி திரவம் இல்லைன்னா, சாதாரண சோப்பால கையைத் தேய்ச்சு தண்ணியில கழுவணும், அதுவும் திரும்பத்திரும்பக் கழுவணும்.  உங்களுக்கு இருமலோ, தும்மலோ வந்தா, கைக்குட்டையில மூடிக்கிட்டு செய்யணும்.  இதனால வெளிப்படும் சின்னச்சின்ன துளிகள் அதிக தொலைவு பயணிக்காது, தரையிலயும் விழாது, அதிகபட்சம் கைக்குட்டையில தான் இருக்கும், ஆகையால பரவறதுக்கான சாத்தியக்கூறு இருக்காது.  இதைத் தான் நாங்க அவங்களுக்குப் புரிய வைக்கறோம் ஐயா.  ரெண்டாவது விஷயம் என்னென்னா, அவங்க வீட்டில தனிமைப்படுத்தல்ல இருக்கும் போது வெளிய எங்கயும் போகக்கூடாது.  இப்ப முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கு; இந்தக் குறிப்பிட்ட காலத்தில அவங்க குறைஞ்சது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்ல ஈடுபட்டிருக்கணும்னு நாங்க அவங்களுக்கு செய்தி அளிச்சு வர்றோம்.

மோதிஜி: சரி டாக்டர், நீங்களும் உங்க குழுவினரும் முழு அர்ப்பணிப்போட சேவை செஞ்சிட்டு வர்றீங்க. உங்ககிட்ட வர்ற எல்லா நோயாளிகளுமே குணமாகித்தான் போவாங்க, இந்த நோய் தொற்றுக்கு எதிரான நம்மோட போர்ல உங்க எல்லாரோட உதவியோடயும் நாம வெல்வோங்கற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.  

டாக்டர் போர்ஸே: நாம ஜெயிப்போங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு ஐயா. 

மோதிஜி: பலப்பல நல்வாழ்த்துக்கள் டாக்டர் போர்ஸே அவர்களே. நன்றி.

டாக்டர் போர்ஸே:  ரொம்ப நன்றிங்கய்யா.

      நண்பர்களே, நம்முடைய மருத்துவ நண்பர்கள் அனைவரும் நாட்டுமக்கள் அனைவரையும் இந்தப் பெரும் சங்கடத்திலிருந்து மீட்டெடுக்க கச்சைகட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.  இவர்கள் கூறும் விஷயங்களைக் காதில் மட்டும் போட்டுக் கொள்வதோடு நின்று விடாமல், இவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்றவும் செய்ய வேண்டும்.  மருத்துவர்களுடைய தியாகம், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது, ஆச்சார்யரான சரகர் கூறிய சொற்கள் தாம் என் நினைவுக்கு வருகின்றன.  ஆச்சார்ய சரகர் அன்று கூறியதை இன்று நமது மருத்துவர்கள் விஷயத்தில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  ஆச்சார்ய சரகர் என்ன கூறினார் தெரியுமா…..

Exit mobile version