ராகு கேது பெயர்ச்சியில் 2023 மேஷ ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன ?

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 – ம் பாதம் வரை)

எப்போதும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து, துணிச்சலுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு எண்ணியதை அடையும் திறமை பெற்ற மேஷ ராசி நண்பர்களே…

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்குள் ராகு பகவானும், 7 ம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரித்து உங்கள் நிலையை அப்படியே தலைக்கீழாக மாற்றிப் போட்டிருப்பார்கள். பல்வேறு சங்கடங்களை, நெருக்கடிகளை, அவமானங்களை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். நிம்மதியைத் தேடி கோயில் கோயிலாக சென்று வந்திருப்பீர்கள். ஏன் பிறந்தோம் என்று நினைத்திடக்கூடிய அளவிற்குப் பல்வேறு சோதனைகளை நீங்கள் சந்தித்திருக்கலாம். குடும்பத்திலும் சங்கடம். உறவினர்களிடம் மோதல். அலுவலகத்தில் பிரச்சினை என்று திரும்பிய பக்கமெல்லாம் சங்கடம், சங்கடம் என்று படாத பாடெல்லாம் பட்டிருப்பீர்கள்.

இந்த நிலையில் தான் 8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12 ஆம் இடமான மீன ராசிக்கும், கேது பகவான் 7 ம் இடத்திலிருந்து விலகி 6 ஆம் இடமான கன்னியிலும் 26.4.2025 வரை சஞ்சரிக்க உள்ளனர்.

இந்த ராகு – கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது? பல்வேறு சங்கடங்கள், அவமானங்கள், பிரச்சனைகளில் சிக்கி அவதிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சர்ப்ப கிரகங்கள் பெயர்ச்சியாகும் இக்காலத்திலாவது நன்மைகள் உண்டாகுமா? அல்லது, மேலும் சங்கடத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

விரய ராகுவின் சஞ்சாரமும் பார்வைகளும்

8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12 ம் இடமான மீன ராசிக்குள் செல்கிறார். அங்கிருந்து அவர் 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தையும், 6 ம் இடமான சத்ரு ஸ்தானத்தையும், 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் தன்னுடைய பின்னோக்கிய பார்வைகளால் பார்வையிட இருக்கிறார்.

விரய ஸ்தானமெனும் 12 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும்போது சங்கடமான பலன்களைவிட நன்மையான பலன்களே அதிகரிக்கும். உடல் நலம் முன்பைவிட இப்போது சிறப்பாகும். இருந்தாலும், மனதில் இனம் புரியாத குழப்பமும், சங்கடமும் இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் எதிர்நோக்கியுள்ள வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். இருந்தாலும், உங்கள் மனதில் திருப்தி என்பது இல்லாமல் போகும். செய்கின்ற தொழிலில் சிற்சில தடைகள் இருக்கும். வருமானத்திலும் பெரிய அளவில் திருப்தி இல்லாமல் போகும். வீட்டில் இருக்கும் பொன் பொருட்களை அடமானம் வைத்து சிலவற்றை சமாளிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். முக்கியப் பயணங்கள் உங்களுடைய அஜாக்கிரதையால் தடைபடக்கூடும். உறவினர்களால் உதவிகள் உண்டாகும். வீண் பிரச்சினைகள், அலைச்சல் போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு மனதை வாட்டும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் உண்டாகலாம். பொதுவில் இக்காலத்தில் பொறுமையுடன் இருப்பதும், சிந்தித்து செயல்படுவதும், ஈடுபடும் காரியத்தில் வெற்றியை உண்டாக்கும். விவசாயத்தில் சுமாரான பலன்களே உண்டாகும். கால்நடைகளில் அபிவிருத்தி இருக்காது. வாகன வகைகளிலும் பழுதுபார்ப்புச் செலவென்று இருந்து வரும் இக்காலத்தில் இருப்பதை விற்றாலும் புதியதை வாங்க வேண்டாம் இருப்பிடத்தை மாற்றக்கூடிய நிலையும், சூழலும் ஒரு சிலருக்கு உண்டாகும்.

குடும்ப ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

12 ம் வீட்டில் அமர்ந்து அங்கிருந்து 2 ம் வீடான குடும்பம், வாக்கு, நேத்திர ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்தும் ராகு பகவானால் உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். சுய தொழில் எதுவாயினும் அதில் அதிக ஆர்வம் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். அவர்களால் ஒரு சில உதவிகளும் உண்டாகும். குறுக்கு வழியில் முயற்சிகள் மேற்கொண்டு லாபம் சம்பாதிக்க எண்ணுவீர்கள். அதன் வழியே சங்கடங்கள் உருவாக வாய்ப்பிருப்பதால் சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு தொழிலும் இக்காலத்தில் வேண்டாம். வருமானத்தில் குறை, குடும்பத்தில் பிரச்சனை என்று ஏற்படலாம். இருக்கும் இடத்தில் அண்டை அயலார்களால் சங்கடம் உண்டாகலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம், குடும்பத்தில் தொடர்ந்து சுப காரியங்கள் என்று கூடி வரும். ஸ்தல வழிபாடு, புண்ணிய தீர்த்த நீராடல் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சத்ரு ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

12 ம் வீட்டில் அமர்ந்து அங்கிருந்து 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்தும் ராகு பகவானால் உங்கள் நிலையில் பலவகையிலும் நன்மைகளை காணப் போகிறீர்கள். மனதில் புத்துணர்ச்சி. தேகத்தில் புதுப் பொலிவு என்று ஏற்படுவதால் வெற்றி நடைப் போடுவீர்கள். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பல நல்ல சம்பவங்கள் நடந்து உங்கள் நிலையை உயர்த்தும். வேலைத்தேடி வருபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சிகள் வெற்றியளிக்கும். தொழில் புரிவோர்க்கு இது லாபமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு, மேலதிகாரியின் ஆதரவு போன்றவை ஏற்படும். விவசாயம், கால்நடைகளால் பலன்கள் உண்டாகும். வங்கியில் கடன் உதவியும், அதனால் விவசாயக் கருவி, வாகனம் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வழக்குகள் வெற்றியாகும். உங்களை எதிர்த்து வந்த விரோதிகள் இக்காலத்தில் பலமிழந்து போவார்கள். வீட்டில் நவீன பொருட்கள், ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர் வருகையால் நன்மைகள் நிகழும். ஒரு சிலர் வீடு மனை நிலம் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகளால் செலவுகள் இருந்து வரும். திருமண வயதினருக்கு திடீர் திருமணம் ஏற்படும். எதிர்பாலினரால் பலவகையிலும் நன்மைகள் அடைவீர்கள். லாட்டரி, ரேஸ், ஸ்பெக்குலேஷன்களில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கை விருந்துகளில் பங்கெடுப்பீர்கள்.தாம்பத்தியத்தில் அதிகமான ஆர்வம் ஏற்படும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணைக்கு அப்பாற்பட்டவர்களின் தொடர்பும், அவர்களால் சந்தோஷமடையும் நிலையும் உண்டாகும்.

தொழில் ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

12 ம் வீட்டில் அமர்ந்து 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்தும் ராகு பகவானால், நீங்கள் செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டியதாகவும் இருக்கும். நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். வாகனம் வாங்க, இயந்திரம் வாங்க வசதிகள் ஏற்படும். எதிர்பார்த்த அரசாங்க உதவிகள் உங்களை வந்தடையும். அதனால் அதிக அளவில் நன்மைகளை அடைவீர்கள். வியாபாரம், தொழில் சீராகச் செல்லும். உத்தியோகஸ்தர்களின் எண்ணம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பும் நட்பும் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். நண்பர்கள் உறவினர்களின் உதவி அதிகரிக்கும். ஆடம்பர செலவு செய்து விருந்து வைப்பீர்கள். சுப காரியம் ஒன்றை வீட்டில் நடத்தி மகிழ்வீர்கள். மேலதிகாரிகளின் உதவி புதிய வாய்ப்புகளை உண்டாக்கும். பயணத்தினால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். பயனுள்ள தகவல்கள் உங்களை வந்தடையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.

சத்ருஸ்தான கேதுவின் சஞ்சாரமும் பலன்களும்

8.10.2023 அன்று 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தான, கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது பகவான் அங்கிருந்து 12 ம் இடமான விரய ஸ்தானத்தையும், 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும், 4 ம் இடமான சுகஸ்தானத்தையும் தன்னுடைய பின்னோக்கிய பார்வைகளால் பார்வையிட இருக்கிறார். 6 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலத்தில், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடலில் இருந்த பாதிப்புகள் அகலும். மனதில் மிகப்பெரிய துணிவு ஏற்படும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றமான நிலை ஏற்படும். வேலைத்தேடி அலுத்து போனவர்களுக்கு நல்ல வேலை அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அதை விரிவு செய்வதுடன் லாபம் காணுகின்ற நிலையும் உண்டாகும் வங்கி வகையில் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழிலுக்காக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். கிணறு தோண்டுதல், பம்பு செட்டு அமைத்தல், விவசாயத்தை மேலெடுத்தல் போன்ற பணிகளும் இக்காலத்தில் சிறப்படையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் ஊதிய உயர்வும் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய பொருட்கள் ஆடை ஆபரணங்கள், நவீன வசதிகள் உண்டாகும். விரோதிகள் உங்களை விட்டு விலகுவார்கள். வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். கடன்களை அடைத்து விடக்கூடிய வழிவகைகள் ஏற்படும். எந்த விதமான பாதிப்பும் யாராலும் உங்களுக்கு இக்காலத்தில் ஏற்படாது. திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். தெய்வீக காரியங்களுக்காக பயணம் செய்வீர்கள். வேலைக்காகவும், மேற்கல்விக்காகவும் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பியவர்களுக்கு அரசாங்க ஆதரவு ஏற்பட்டு பயணப்படுவீர்கள். பெற்றோர்களால் அதிக அளவில் அனுசரணை ஏற்படும். மேலதிகாரிகள் உற்சாகமூட்டி உங்களுக்கு உதவுவார்கள். எதிலும் லாபம், சேமிப்பு, உயர்வு, ஸ்திர சொத்துகள் வாங்குதல் என்று உங்கள் நிலை உயரும். அனைத்து சுகங்களையும் அடைந்து மகிழக்கூடிய காலமாக இக்காலம் உங்களுக்கிருக்கும்.
இவையெல்லாம் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டாகப் போகும் பலன்கள் என்கிறபோது கேதுவின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகப் போகிறது என்றுதானே கேட்கிறீர்கள்!

அஷ்டம ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

6 ம் இடத்தில் அமர்ந்து 8 ம் இடமான அஷ்டமஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று வாழக்கூடிய அல்லது தொழில் செய்ய வேண்டிய நிலை ஒரு சிலருக்கு உண்டாகும். செய்து வரும் தொழிலில் மந்தமான நிலை ஏற்படலாம். பார்த்து வரும் உத்தியோகத்தில் சிலர் கடுமையாக தண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு. இக்காலத்தில் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விடுபட முடியும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இக்காலத்தில் கிடைக்கும். வெளியூர் பயணங்களை அதிக அளவில் மேற்கொள்வீர்கள். அதனால் பெரிய அளவில் நன்மைகள் என்று எதுவும் இருக்காது. எதிர்பாராமல் விபத்துகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு காரணம் எட்டாம் இடத்தின் மீதான கேது பகவானின் பார்வைதான். இக்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அலட்சியம் காட்டினால் உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இறை மீது முழுமையாக நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள். எதிலும் பொறுமை நிதானம் என்ற நிலைக்குள் வாருங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பாலினரால் கெட்ட பெயர், பொருள் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் பழக்கத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். இல்லையெனில் அதன் வழியே சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.

விரய ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

6 ம் இடத்தில் அமர்ந்து 12 ம் இடமான விரயஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், அடிக்கடி மனம் அமைதியை இழக்கும். சிறிய சங்கடத்திற்கும் பெரிதாக பயப்பட வேண்டிய நிலை உண்டாகும். உறவினர்களால் சங்கடங்கள் கவலைகள் தோன்றும். வீண் அலைச்சல் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வேலைக்கு உணவு உண்ண முடியாமல் போகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. நன்மை செய்ய நினைத்தாலும் அது கெடுதலாகவே முடியும். கெட்ட பெயரும் ஒரு சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு, வீண் மனஸ்தாபம் அதிகரிக்கும். பொருட்களை விற்பனை செய்வதிலும் நஷ்டமே ஏற்படும். கடன் வாங்கினாலும் அதை சீக்கிரம் அடைக்க முடியாமல் போகும். செய்துவரும் தொழில் ஒன்றில்தான் மன அமைதி ஏற்படும். உற்சாகமும், சிறிது மகிழ்ச்சியும் அதன் மூலம் உண்டாகும். அலைச்சல் அதிகம் இருந்தாலும் ஆதாயம் சிறிதாகவே இருக்கும். உறவினர்கள் உதவி என்பது இக்காலத்தில் வீண் கனவாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகலாம்.

சுகஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

6 ம் இடத்தில் அமர்ந்து 4 ம் இடமான மாதூர் மற்றும் சுகஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், தாயாரின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகும். பொருளாதார தட்டுப்பாடும் கடன் தொலையும் அளவிற்கு மீறி உண்டாகும். விவசாயம் கால்நடைகள் போன்றவற்றில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகும். கால்நடைகளும் பயிர்களும் நோய்களால் பாதிப்படையும். எதிலும் வீண் அலச்சல், தேவையில்லாத சச்சரவு இருந்து வரும். குடும்பத்தினர் பற்றிய கவலையும் எதிர்காலம் குறித்த சிந்தனையும் அதிக அளவில் ஏற்படும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். மனதில் சஞ்சலம் குடிகொள்ளும். தீய நண்பர்களின் சேர்க்கையால் தீய பழக்கங்களும் ஏற்படும். வீடு வாகனம் போன்றவற்றில் பழுதுபார்ப்பு செலவு தோன்றும்.

பொதுப்பலன்
ராகு – கேதுவின் சஞ்சாரத்தை வைத்தும், அவர்கள் பார்க்கும் பார்வைகளை வைத்தும் ஏற்படப்போகும் பலன்கள் பெருமளவில் உங்களுக்கு சாதகம் என்றே சொல்ல வேண்டும். மேஷ ராசியினரான உங்களுக்கு ராகு பகவான் 12 ம் வீட்டில் விரய ராகுவாக சஞ்சரித்தாலும் உங்கள் வருவாய் அதிகரிக்கும். கேது பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகப்பெரிய யோகம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை இருந்து வந்த அத்தனை சங்கடங்களில் இருந்தும் இனி நீங்கள் வெளியே வருவீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இனி உண்டாகாது. துணிச்சலாக நடை போடக்கூடிய காலமாக எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளும் உங்களுக்கு இருக்கப் போகிறது.

குரு – சனி சஞ்சாரப் பலன்கள்

ராகு 12 லும், கேது 6 லும் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ள நிலையில், 20.12.2023 முதல் சனி பகவான் உங்களுக்கு லாப சனியாக 11 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போவதால் இதுவரையில் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த சங்கடங்கள் முழுமையாக அகலும். எதிர்பார்த்த அனைத்திலும் வெற்றி என்ற நிலை ஏற்படும். இதுவரை தொய்வாக இருந்த நிலைகள் எல்லாவற்றிலும் மாற்றம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடைபெறும். வாழ்க்கையில் முன்னேற்றம், கௌரவம், செல்வாக்கு அதிகரிக்கும். பல வகையிலும் லாப சனியால் நன்மையை அடையப் போகிறீர்கள்.

31.4.2024 வரை உங்கள் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் உங்கள் ராசிக்கு 5,7,9 ம் இடங்களில் பதிவதால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு வேலை அமையும். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஆலய வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

1.5.2024 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பொருளாதார வரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அவருடைய பார்வைகள் 6,8,10 ம் இடங்களில் பதிவதால் எதிர்ப்புகள் விலகும், வழக்குகள் சாதகமாகும், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும், பெரிய அளவில் அச்சுறுத்திய நோய்களும் மருத்துவத்தால் விலகும். தொழிலில் உண்டான தடைகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும், அரசியல் வாதிகள், அதிகாரிகளின் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்
ஒரு முறை காளகஸ்திக்கு சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்துவிட்டு வருவதுடன், சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கும், இயலாதவர்களுக்கும் உணவு உடை போன்ற தானங்களை செய்து வர சங்கடங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

*ஜோதிட வித்தகர்*
*திருக்கோவிலூர் பரணிதரன்*
2/121. பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர் 605759.
விழுப்புரம் மாவட்டம்.

*9444393717* — *9940686060*

Exit mobile version