ராகு கேது பெயர்ச்சி 2023 ரிஷப ராசிக்கு சாதகமா பாதகமா முழு பலன்கள்.

ரிஷபம்

(கார்த்திகை 2 – ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிடம் 2 – ம் பாதம் வரை)

அறிவாற்றலுடன் மன திடமும் கொண்டு மற்றவர்களால் முடித்திட முடியாத செயல்களை முடித்து, எதிரிகளை வீழ்த்தும் வலிமை மிக்க ரிஷப ராசி நண்பர்களே….

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் ராகு பகவான், 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் நிலையில் ஏற்றம் மாற்றம் என்ற நிலைபாட்டினை உண்டாக்கி இருப்பார்கள். ஒரு பக்கம் வெற்றி என்றால் மறுபக்கம் சங்கடம் என்ற நிலை உண்டாகி இருக்கும். எப்படி இருந்தாலும் மிகப்பெரிய அளவில் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கி இருக்க மாட்டார்கள்.

எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக நீங்கள் இருந்திருப்பீர்கள். செலவுகள் மட்டும் கட்டுக்கடங்காமல் போய், அதன் காரணமாக மனதில் குழப்பம் உண்டாகி இருக்கும். வீண் செலவுகள், ஆடம்பரத்திற்காக, சுய கௌரவத்திற்காக என்று உங்கள் கையிருப்பு பல வகையிலும் கரைத்திருக்கும் என்றாலும், போனது போகட்டும் நம்மால் எல்லாவற்றையும் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற நினைப்பும் துணிவும் உங்களைத் தூக்கி நிறுத்தியிருக்கும். இழப்புகள் பற்றியும் நீங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். எதிர்ப்புகள் பற்றியும் யோசித்திருக்க மாட்டீர்கள். எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்று உங்களின் இயல்பான காரியங்களில் கவனம் செலுத்தி வந்திருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையையும், சங்கடங்களையும், உறவினர்கள் வகையில் பகையையும் சந்தித்து வந்திருப்பீர்கள்.

இந்த நிலையில்தான் 8.10.2023 அன்று ராகு பகவான் 11 ம் இடமான லாப ஸ்தானத்திலும் கேது பகவான் 5 ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரித்து 26.4.2025 வரை அங்கிருந்து பலன்களை வழங்கிட உள்ளனர்.

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது? இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வருமா? செலவு செலவென்று வரவுக்கு மீறி செலவு செய்து கொண்டிருந்த நிலைமை மாறுமா? எதிரிகளின் தொல்லை மீண்டும் தலை தூக்குமா? குடும்பத்தில் ஒற்றுமை உருவாகுமா? அவப்பெயர் மறையுமா? செய்யாத தவறுக்கெல்லாம் குற்றம் சுமத்திய நிலை முடிவிற்கு வருமா? அல்லது, மேலும் சங்கடங்கள் தோன்றுமா? முன்பிருந்த நிலையில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டா? இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

லாப ஸ்தான ராகுவின் சஞ்சாரமும் பார்வைகளும்

8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11 ம் இடமான மீன ராசிக்குள் செல்கிறார். அங்கிருந்து அவர் உங்கள் ஜென்ம ராசியையும், 5 ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் தன்னுடைய பின்னோக்கிய பார்வைகளால் பார்வையிட இருக்கிறார்.

லாப ஸ்தானம் என்னும் 11 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் போது, உடல் நிலையில், மன நிலையில் இருந்து வந்த சங்கடங்கள், தொல்லைகள் விலகும். உடலில் புதிய தெம்பு வந்ததுபோல் இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சரியான திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கும். மற்றவர்களின் உதவியும் கிடைக்கும். வேலையில்லாமல் சங்கடத்தோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு வேலை அமையும்.

அரசு வகையில் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். கடன் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யவும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களால் நன்மைகள் கிடைக்கும். கலைஞர்கள் சிறப்புபெறும் காலமாகவும் இக்காலம் இருக்கும். கல்வி கற்போர் கல்வியில் சிறப்படையும் நிலை தோன்றும். வெளிநாட்டு முயற்சிகள் கூடிவரும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கையும், சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். புதிய வாகனம் வாங்க வழிவகை ஏற்படும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இக்காலம் இருக்கும் என்பதால் அனைத்திலும் வெற்றியே ஏற்படும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். பெரியோர் சந்திப்பு, தெய்வத் தல யாத்திரை, மகான்களின் ஆசி போன்றவை கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

ஜென்ம ராசிக்கு ராகுவின் பார்வை

11 ம் வீட்டில் அமர்ந்து அங்கிருந்து உங்கள் ஜென்ம ராசியை பார்க்கும் ராகு பகவானால், உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் மாற்றம் ஏற்படும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். சிலருக்கு இடமாற்றமும் உண்டாகும். சில நேரங்களில் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும் என்பதால் அதனால் பலனிலும் மாறுதல் ஏற்படும். உங்கள் தனித் தன்மையை யாருக்காகவும் இழக்க மாட்டீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகளால் வரவைவிட செலவு அதிகமாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதின் வழியாக அல்லது ஜாமீன் கொடுப்பதின் வழியாக உங்களைத்தேடி பிரச்சினைகள் வந்தடையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் அல்லது உங்கள் எதிர்காலத்தை ஒட்டிய பணிகள் நடைபெறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெற்று உயர்ந்து நிற்பீர்கள். திருமணமாகாதவர்களாக இருந்தால் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை ஏற்படும். எந்த இடத்திலும் தனித்து நின்றே எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

11 ம் இடத்தில் அமர்ந்து 5 ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்தும் ராகு பகவானால், உங்கள் மனம் தெளிவடையும். செய்துவரும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரி அல்லது முதலாளிகளால் அனுகூலம் காணக்கூடிய நிலை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உருவாகும். உறவினருடன் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று சுமூகமான நிலை ஏற்படும். அவர்களால் உதவியும் கிடைக்கும். தடைப்பட்ட முயற்சிகள் மற்றும் காரியங்கள் கூடிவரும். ஸ்பெக்குலேஷன் ரேஸ் மற்றும் போட்டி பந்தயங்களில் நல்ல பலன் உண்டாகும். வழக்குகளில் நன்மைகள் உண்டாகும் ஆனால், முடிவுகள் நல்ல விதமாக வந்தாலும் நீங்கள் நினைப்பதுபோல் இருக்காது. வேலையின் காரணமாக வேளை தவறிய உணவு, உறக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவு சாதாரணமாக இருக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தாலும் புத்திர பிராப்தி என்பது இப்போது இருக்காது. பிள்ளைகள் வழியே சங்கடங்கள் சிரமங்கள் என்ற நிலை உருவாகும். பூர்வீக சொத்துகளில் பழுதுபார்ப்பு செலவு ஏற்படும். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும்.

பாக்கிய ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

11 ம் இடத்தில் அமர்ந்து 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்துகின்ற ராகு பகவானால், மனதில் உற்சாகம் தோன்றும். தேகத்தில் பொலிவு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். செய்துவரும் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டு முயற்சிகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட கல்வி தொடரும் அல்லது கல்வியில் மேன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்க வழி உண்டாகும். சொத்து சம்பந்தமான நிலைகளில் நல்ல பலன் ஏற்படும். குடும்பத்தினர் உறவினர் நண்பர்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்குவதற்காக உதவி செய்வீர்கள். வீண் செலவுகள் பலவகையிலும் தொடர்ந்தபடி இருக்கும் தந்தையின் உடல் நிலையை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும். இழந்த பொருட்களை மீட்க வழிவகை உண்டாகும் பூர்வீக சொத்துகளை மாற்றி அமைக்கும்படி இருக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தான கேதுவின் சஞ்சாரமும் பலன்களும்

8.10.2023 அன்று 5 ம் இடமான பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானமான கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது பகவான் அங்கிருந்து 3 ம் இடமான சகோதர ஸ்தானத்தையும், 7 ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் 11 ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார்.

5 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலத்தில், பெரிய மனிதர்களின் சந்திப்பும் அவர்களின் உதவியும் உண்டாகும். செய்துவரும் தொழிலில் எத்தகைய சங்கடங்கள் உண்டானாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்திடக்கூடிய வலிமை உண்டாகும். இருக்கும் இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு செல்லும் வகையில் சூழ்நிலை மாறும். அண்டை அயலார்களால் சிற்சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். உறவினர்களிடையே பிரச்சினை, மனக்கசப்பு என்று நீடித்துக் கொண்டே போகும். வீண் அலைச்சல் அதனால் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாத, உறங்க முடியாத நிலைமை நீடிக்கும். பணச்செலவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் புதிய நட்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாலினரால் அனுகூலம், உதவி, சொத்து, மகிழ்ச்சி என்று கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இக்காலத்தில் அது நிறைவேறாமல் போகும். ஒரு சிலர் மனைவிக்கு கருச்சிதைவும் உண்டாகும்.

இவையெல்லாம் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டாகப் போகும் பலன்கள் என்கிறபோது கேதுவின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகப் போகிறது என்றுதானே கேட்கிறீர்கள்!

சகோதர ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

5 ம் இடத்தில் அமர்ந்து தைரிய வீரிய சகோதர ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், பல்வேறு சங்கடங்களில் சிக்கித்தவித்த உங்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை ஏற்படும். நன்மைகளுக்கு மேல் நன்மைகள் நடக்கும் என்றே சொல்ல வேண்டும். இதுவரை பட்ட துன்பங்கள், துயரங்கள், வறுமை, நோய்தொல்லை போன்ற அனைத்தும் இனி உங்களை விட்டு அகலும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நோய் பாதிப்பு குறைந்து ஆரோக்கியம் ஏற்படும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள் வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இக்காலத்தில் சேமிப்பு என்பது நல்லது. பல விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் நன்மைகளை அடையலாம். வருமானத்தை விட உபரி வருமானம் அதிக அளவில் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் தக்க தருணத்தில் ஆலோசனைகள் தந்து உங்கள் முன்னேற்றத்திற்கு துணை புரிவார்கள். விவசாயம் கால்நடைகளில் அபிவிருத்தியும் ஆதாயமும் அதிகரிக்கும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். நவீன பொருட்களின் சேர்க்கை அதிக அளவில் ஏற்படும்.

களத்திர ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

5 ம் இடத்தில் அமர்ந்து அங்கிருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் கேது பகவானால், எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற துடிப்பு உங்களுக்கு உண்டாகும். இதனால் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படும். செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதில் உங்களுடைய சஞ்சல மன நிலையின் காரணமாக முழுமையான கவனத்தை செலுத்த முடியாமல் ஆதாயத்தில் தடை உண்டாகும். எதிர்பாலினரின் ஈர்ப்பால் கவனம் சிதறும். நேரம் விரயமாகும். சில சங்கடங்களையும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். அதனால் உங்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் பூசல்கள், சங்கடங்கள் என்ற நிலை ஏற்படும். துணையின் உடல் நலனிலும் மன நலனிலும் பாதிப்புகள் தோன்றும். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் புதிய நட்புகள் சினேகிதங்கள் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும். வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆசைகளின் காரணமாக தவறான வழி செல்வதன் வழியாக உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிக்கலாவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால், மகிழ்ச்சிக்கு பதில் பிரச்சனைகளே தோன்றும். குடும்பத்தில் பல்வேறு சங்கடங்கள் உருவாகி உங்கள் மனநிலையையும் சங்கடப்படுத்தும்

லாப ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

5 ம் இடத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், மனதில் அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். எது வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். விலகிச்சென்ற நண்பர்கள் திரும்பவும் உங்களைத்தேடி வருவார்கள். உடன் பிறந்தவர்களால் உதவியும் ஒத்துழைப்பும் இக்காலத்தில் உண்டாகும். இருப்பிடத்திலிருந்த அசௌகரியங்கள் விலகி வசதியான நிலை உருவாகும். புதிய இடம் புதிய வாழ்க்கை என்று மனம் மகிழ்ச்சியில் துள்ளும். புதியதாக வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் அதிக அளவில் உதவி, ஆதாயம் ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான போக்கு இருந்து வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்துடன் தல யாத்திரை புனிதப்பயணம் சென்று வருவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, கல்வி முயற்சிகள் வெற்றிபெறும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாலிரின் நட்பு அவர்களால் சந்தோஷம் என்ற நிலையும் இக்காலத்தில் சிலருக்கு உருவாகும். மிகுந்த எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே எதிர்பாலினரின் ஈர்ப்பிலிருந்து உங்களால் விடுபட முடியும். உங்கள் வாழ்க்கையை சரியாக கொண்டுசெல்ல முடியும். இல்லை என்றால் தடுமாற்றம் தடமாற்றம் என்று உங்கள் வாழ்க்கை வேறு பாதையில் சென்று சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியாதாக மாறும்.

பொதுப்பலன்

ராகு – கேதுவின் சஞ்சார நிலைகளும், அவர்கள் பார்க்கும் பார்வைகளும் பெருமளவில்
உங்களுக்கு சாதகத்தையே வழங்கப் போகிறது.

ரிஷப ராசியினரான உங்களுக்கு ராகு பகவான் லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் சஞ்சரிப்பது மிகுந்த யோகத்தை வழங்கிடக் கூடியதாக இருக்கும். சர்ப்ப கிரகங்கள் 3,6,11 ம் இடங்களில் சஞ்சரிக்கின்ற போதும் 3,6,11 ம் இடங்களைப் பார்வையிடும் போதும் அந்த ஜாதகருக்கு யோகமான பலன்களை அள்ளி வழங்குவார்கள் என்பதால், இந்த ராகு – கேது பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு ராகு பகவான் யோகத்தையும் போகத்தையும் அதிகரிக்கப் போகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு வசதி வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகப் போகிறது.

இந்த நேரத்தில் கேது பகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிப்பது சாதகமான நிலையாக இருக்காது என்றாலும் பாதகமான நிலையாகவும் இருக்காது. காரணம், அவர் பார்க்கின்ற 3,11 ம் இடங்கள் வழியே நன்மைகளும், தைரியமான மனநிலையும், லாபமும், சந்தோஷமும் இக்காலத்தில் உண்டாகப் போகிறது. எனவே எதிர் வரும் ஒன்றரை ஆண்டு காலமும் உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறப்பான பலன்களை அடைந்து மகிழப்போகிறீர்கள்.

குரு – சனி சஞ்சாரப் பலன்கள்

ராகு 11 லும் கேது 5 லும் சஞ்சரித்து யோகப் பலன்களை வழங்கிட உள்ள நிலையில், 20.12.2023 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், சுயமாக தொழில் புரிந்து வருபவர்களுக்கும் எதிர்பாராத சங்கடங்களும் நெருக்கடிகளும் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனைகளும், வீண்பழியும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றமும், விரும்பாத பொறுப்பினை அடைகின்ற நிலையும் ஏற்படும். வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏதேனும் ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக சனி பகவான் உங்களுக்கு நன்மைகளை வழங்கிடும் நிலையில் இல்லை என்றாலும் ராகு பகவான் அதனை ஈடு செய்வார்.

31.4.2024 வரை 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 4,6,8 ம் இடங்களில் பதிவதால் ஆரோக்கியம் மேம்படும். மனதில் சந்தோஷமும் எதிர்பார்த்த மகிழ்ச்சியும் உண்டாகும். இழுபறியாக இருக்கும் வழக்குகள் சாதகமாகும். உடலில் இருந்த அச்சம் விலக ஆரம்பிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழக்கும் நிலை உருவாகும்.

1.5.2024 முதல் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அவருடைய பார்வைகள் 5,7,9 ம் இடங்களில் பதிவதால் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி முன்னேற்றமாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். குலதெய்வ அருளும் இஷ்ட தெய்வ அருளும் உங்களை வளமாக்கும்.

பரிகாரம்
ஒருமுறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானுக்கு நல்லெண்ணை தானம் செய்து வழிபட்டு வர சங்கடங்கள் விலகும். வயோதிகர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதின் வழியாக உங்களுக்கு வரப்போகும் சங்கடங்கள் விலகும்.

ஜோதிட வித்தகர்
திருக்கோவிலூர் பரணிதரன்
2/121. பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர் 605759.
விழுப்புரம் மாவட்டம்.

94443937179940686060

Exit mobile version