பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. 3 ஆண்டுகளாக தமிழக பாஜகவின் தலைவராக செயலாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் தற்போது காட்டு தீயாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிகாலம் இருக்கும் நிலையில், சொந்த காரணங்களுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாஜகவிற்கு ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. நன்றாக காலூன்ற அவர் மிகவும் பாடுபட்டார்.
இதனிடையே பா.ஜ.க.வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டநிலையில், கடந்த ஏப். 11-ஆம் தேதி புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இளைஞர்களின் நாயகனாக விளங்கினார். திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் அண்ணாமலை பாத யாத்திரை, சாட்டையடிப் போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது என்பன போன்ற நூதனமான செயல்பாடுகளால் தமிழக மக்களால் ஈர்க்கப்பட்டார் மேலும் தமிழக பாஜக தினசரி அரசியல் தளத்தில் பேசப்படுவதற்கான ஆதாரமாக விளங்கினார் அண்ணாமலை.
தமிழகத்தில் தான் அரசியல் செய்வேன் என கூறி வரும் அண்ணாமலை அவர்களுக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது .அவ்வாறு கட்சி பதவி கிடைத்தால் மத்திய அமைச்சராக முடியாது . மேலும் தென்னிந்திய பாஜகவின் இணை பொறுப்பை வழங்கவும் உள்ளதாம் எனவே அண்ணாமலை தரப்பினர் தீவிரமாக யோசித்து வருகிறார்களாம் மேலும் இண்டி கூட்டணியினர் அலறலில் உள்ளார்களாம்.
ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டவுடன் அண்ணாமலைக்கு கேபினட் அந்தஸ்தில் உள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக மட்டுமே இருந்த அண்ணாமலையை தற்போது அதைவிட மிகப்பெரிய பதவி அவருக்கு காத்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.