மதுரை மாவட்டம்,பேரையூரில் நடந்த,தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன் என்பார்,தனக்கு நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார்.அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனுக்கு,மருத்துவச்சான்றின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டது.
இதுக்குறித்து கணேசனிடம் விசாரித்ததில், எம்.கல்லுப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கதிர்வேல், 45,என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்து சான்றிதழ் பெற்றதாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த சுவாமிநாதன், உடனடியாக கதிர்வேலிடம் விசாரித்தார்.அதில்,கணேசனுக்கு தந்த மருத்துவச்சான்று போலியாக தயாரிக்கப்பட்டது உறுதியானது.
அதை யார் தயாரித்து கொடுத்தது போன்ற விபரங்களை கதிர்வேல் சொல்ல மறுத்துவிட்டார்.இதுகுறித்து சுவாமிநாதன் புகாரின்படி,தல்லாக்குளம் போலீசார்,கதிர்வேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுக்குறித்து போலீசார் கூறுகையில்,’கதிர்வேல் கூறினால் தான் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், ‘நெட்வொர்க்’ ஆக செயல்படுகின்றனரா, எத்தனை ஆண்டுகளாக இதுபோன்று செயல்படுகின்றனர் என தெரியவரும்’ என்றனர்.
