ஸ்டாலின், அசுரன் பார்த்தார், முரசொலி மூலபத்திரம் பிரச்சினை வெடித்தது! ஜெய்பீம் பார்த்தார், ரியல் ஹீரோ கோவிந்தன் படையாட்சியை யார் என்று தெரிந்தது ..!

Oredesam

நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா இணைந்து தயாரித்த படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யாவும் நடித்து உள்ளார்.

தமிழக மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க கூடாது என்று சொன்ன சூர்யா நடித்து, தயாரித்த இந்த திரைப்படம், இந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திரைப் படம் தயாரிப்பில் இருந்தபோதோ அல்லது வெளியாகும் என்ற செய்தி வெளியான போதோ இது பற்றி யாரும் விமர்சிக்கவோ, குறை சொல்லவோ முன்வரவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தனது பிரதான வேலை இதுதான் என்று, ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு அதற்கு திரை விமர்சனம் எழுதி வெளியிட்டார். அப்போதுதான் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த திரைப்படத்தில் ஏதோ வில்லங்கம் உள்ளது, ஏதோ கருத்து திரிபு உள்ளது, ஏதோ ஒன்று இந்த திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது, ஏதோ ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துகின்ற வகையில் இதனுடைய கருத்துகள் உள்ளன, இந்து மதத்தை இழிவு படுத்துகின்ற வகையில் இதில் கருத்து திணிக்கபட்டு உள்ளது, என்பன போன்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அலை அலையாய் ஓடின.

ஸ்டாலின் இதற்கு முன்பு அசுரன் திரைப்படத்தை பார்த்தார். பின்னர் அது தொடர்பாக விமர்சனத்தை வெளியிட்டார். அசுரன் திரைப்படத்தில் மேல் ஜாதியினர் என்று சொல்லப்படுகின்ற சமுதாயங்களை சேர்ந்தவர்கள், பட்டியலின சமுதாயங்களை சேர்ந்தவர்களை வஞ்சித்துவிட்டார்கள் என் விஷ கருத்தை விதைத்து இருந்தார்கள்.

“அசுரன் திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த பட்டியலின சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யலாம்” என்ற உள்நோக்கத்தோடு படத்தை பார்த்தது மட்டுமல்லாமல், விமர்சனம் என்ற பெயரில் பற்ற வைத்தார் ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், திமுக வில் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம்தான் என்ற உண்மையை ஒரே போடாக போட்டு உடைத்தார்.

தீ பற்றிக்கொண்டது. “முரசொலி மூலப்பத்திரம் எங்கே?” என்ற கேள்வி எழுந்தது. அது மாதக்கணக்கில் தொடர்ந்தது. கடைசிவரை ஸ்டாலினால் முரசொலியில் மூல பத்திரத்தை வெளியிட முடியவில்லை.

அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் தான் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி வெளியிட்ட்டார்.

தாங்கள் விரித்த வலையில், தாங்களே விழுந்துவிட்டதை உணர்ந்த ஸ்டாலின், அதனை திசை திருப்புகிற வகையில் பல்வேறு பித்தலாட்டங்களை கட்டவிழ்த்து விட்டார். பல்வேறு திசைதிருப்பும் நாடகங்களையும் அரங்கேற்றினார்கள்.

அதுபோன்ற ஒரு சூழ்நிலையைத்தான், ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின் இப்போதும் ஏற்படுத்தி உள்ளார்.

1993-ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

கம்மாபுரம் அருகே உள்ளது முதனை என்கிற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவர் பட்டியலின சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய குறும்பர் ஜாதியை சேர்ந்தவர். இவரை சித்தரவதை செய்து காவல்நிலையத்தில் கொலை செய்தவர், சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி. இவரும் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்தான்.

எனவே காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அதேபோல அவரை கொலை செய்த கொலையாளி அந்தோணிசாமியும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இதில் ராஜாக்கண்ணு இந்து. அந்தோணிசாமி கிறிஸ்தவர்.

நிஜ சம்பவத்தில் வக்கீலாக பணியாற்றியவர் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜாக்கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு இந்து பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாய குறியீடுகளை காலண்டர் மூலம் திட்டமிட்டு வெளிப்படுத்தி உள்ளனர்.

அதாவது பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து, கொலை செய்து உள்ளார் என்று ரசிகர்களுக்கு காட்டி உள்ளனர். பட்டியிலின சமுதாய மக்களுக்கு வன்னிய சமுதாய மக்கள் எதிரிகள் என்பது போல் சித்தரித்து உள்ளனர்.

அதோடு நிஜ கதையில் ரியல் ஹீரோவாக இருந்தவர் கோவிந்தன். இந்த கொலை சம்பவத்தை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் அவர். “இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை, திருமணம் செய்து கொள்ளமாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டவர் அவர். அந்த சபதத்தின் படி 2006-ஆம் ஆண்டு ராஜக்கண்ணு கொலைக்கு நீதி கிடைத்த பிறகு, தனது 39-வது வயதில் திருமணம் செய்து கொண்டார் கோவிந்தன்.

அப்படிப்பட்ட கோவிந்தன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவர் வன்னியர் என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரது கதாபாத்திரத்தை திரைப்படத்தில் முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்த வழக்கில் வாதாடிய சந்துருவை மிகப் பெரிய ஹீரோவாக கட்டமைத்து உள்ளார்கள்.

அதேபோல கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியை இந்துவாக மாற்றி அவரது பெயரை வன்னியர் சமுதாயத்தில் மாவீரராக போற்றப்படும் மறைந்த காடுவெட்டி குருவின் பெயரை நினைவுபடுத்துகின்ற வகையில் குருமூர்த்தி என்று திட்டமிட்டு வன்மத்துடன் திணித்து உள்ளனர்.

உண்மையான ஹீரோ கோவிந்தன்தான் என்பதுவும், அவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுவும், அவர்தான் ராஜாக்கண்ணுவின் கொலைக்கு நீதி கிடைக்க நீண்ட தொடர் போராட்டத்தை மேற்கொண்டவர் என்கின்ற உண்மையும், இப்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

ராஜாக்கண்ணு கொலை செய்யப்பட்டபோது, முதனை கிராமத்தில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த 4 குடும்பங்கள் மட்டுமே இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறும்பர் சமுதாய மக்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து அவர்களுக்காக போராடியவர்களில் பெரும்பாலானோர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது அப்பட்டமான உண்மை. பிற சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இதில் பங்கெடுத்து உள்ளனர்.

ஆனால் அவை அனைத்தையும் மறைத்துவிட்டு ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தையுமே வில்லன்களாக இந்த படத்தில் வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் ஜெய் பீம் திரைப்படத்தை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த உண்மைகள் எல்லாம் வெளி உலகத்திற்கு தெரியாமல் போயிருக்கக் கூடும். ஆனால் அவர் இந்த திரைப்படத்தை பார்த்ததோடு, அதற்கு விமர்சனமும் எழுதியதன் மூலம், இப்போது இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

எனவே, இந்த உண்மைகள் வெளியே வர காரணமான இருந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும்

Exit mobile version