நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்! மேடையிலேயே நிவாரணத்தை திருப்பிக் கொடுத்த மீனவர்! பரபரப்பை கிளப்பிய சம்பவம்!

mkstalin

mkstalin

முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டர். மேலும் இயற்கை பேரிடரில் சேதமடைந்த படகுகளுக்கு 2 லட்சம் நிவாரண தொகையை மீனவர்களுக்கு வழங்கினார். நிவாரண தொகை வாங்கிய மீனவர் ரமேஷ் என்பவர் மீண்டும் அதே மேடையில் வைத்து முதல்வர் ஸ்டாலினிடம் திருப்பி கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளிப்பியுள்ளது.

ரூ.114.48 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.ரூ.655.44 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட கட்டடங்களுக்கான திறப்பு விழாவை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் ரமேஷ். இவருடைய விசைப்படகு இயற்கை பேரிடரால் சேதமடைந்த நிலையில், அவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட அவர், முதல்வரிடம் ஏதோ சொல்லிக்கொண்டே மீண்டும் அந்தக் காசோலையை முதல்வரிடம் திருப்பி கொடுத்தார்.

ஆனால் முதல்வர் காசோலையை வாங்கவில்லை. அதன் பிறகு அருகில் நின்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம் கொடுத்தார், அவரும் வாங்கவில்லை. பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் கொடுக்க.அதை வாங்கிய அவர் அருகில் இருந்த அன்பில் மகேஸிடம் கொடுத்தார்.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. ரமேஷின் செயலால் மேடையின் கீழ் நின்ற தி.மு.க-வினர் ஆத்திரமடைந்தனர். பின்னர் கீழே இறங்கி வந்த ரமேஷை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் திமுகவினரால் ரமேஷ் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவியது.

இதனை தொடர்ந்து வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் தனக்கு வழங்கப்பட்ட காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டார். இதையடுத்து அவரை அங்கே இருந்த தி.மு.க.,வினர் தாக்கியதாக கூறப்படுகிறது.மத்தியில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. மீனவரை தாக்கிய தி.மு.க.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரமேஷ் தரப்பில் விசாரித்தபோது : `விசைப்படகு சேதமடைந்ததற்கு ரூ.5 லட்சம கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்கவில்லை. பல முறை மனு அளித்த பிறகு நிவாரணத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 2 வருடம் கழித்து தாமதமாக வழங்குகின்ற இந்த தொகையும் முழுமையாக கிடைக்கவில்லை என முதல்வரிடம் மனக் குமுறலை வெளிப்படுத்தியுளதாகவும், அதனால் காசோலை திருப்பி ஒப்படைக்கப்பட்டது என அவர் தரப்பில் கூறப்பட்டது .

பல்டி அடித்த மீனவர் ரமேஷ் : நிருபர்களிடம் பேசிய மீனவர் ரமேஷ்: நான் பரம்பரை திமுக காரன். முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாறி இருந்த காரணத்தினாலேயே அதனை திருப்பி கொடுத்தேன். வேற எந்த காரணமும் இல்லை. நிவாரணத் தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் பல்டி அடித்துள்ளார்

Exit mobile version